Wednesday, December 12, 2007
Little Miss Sunshine
தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே இருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் திரைப்படத்தின் முடிவும் நம் மனதை பாரமாக்கிவிடுமாறே அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் படம் நெடுக மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் Little Miss Sunshine(2006).
"There's two kinds of people in this world, there's winners and there's losers. Okay, you know what the difference is? Winners don't give up."
ரிச்சர்ட் ஹூவர் மேலாண்மை பேச்சாளராக முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். வயதான தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். மூத்த மகன் ட்வெயின். குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட இளைஞன். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன். ஃப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியராக இருந்து காதல்(?) தோல்வியால் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன். இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.
ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ஹூவர் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி. ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ வலிந்து திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை. படத்தின் முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது. குறிப்பாக எட்வின், ஃப்ராங்க் பேசும் வசனங்கள் அட்டகாசம். அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் புன்னகையை வரவைக்கின்றன.
படத்தில் ஸ்டார்கள் யாருமில்லை. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாய்ப் பொருந்துகிறார்கள். தங்கள் பங்கைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். தாத்தா எட்வினாக நடித்த Alan Arkin இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். ஆலிவாக நடித்திருக்கும் Abigail Breslin ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். குடும்பத்தினரின் சோகம், கோபம், ஏமாற்றம் எல்லாவற்றுக்கும் வடிகாலாக இருக்கும் ஆலிவாக நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். ரிச்சர்டாக Steve Carell அசத்தியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலிருக்கும் கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.
பிடித்த காட்சிகளைப் (நிறையவே இருக்கின்றது) பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன். ஹூவர் குடும்பத்தினர் பயணிக்கும் வேனைப் போலவே சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.
"Losers are people who are so afraid of not winning, they don't even try."
'Little Miss Sunshine' போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா எட்வின் சொல்லும் இந்த வசனமே படத்தின் அடிநாதம். தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன. தோல்விகளைக் கடந்து ஹூவர் குடும்பத்தினரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Tuesday, December 11, 2007
எவனோ ஒருவன்
நடிகர் மாதவன் நடித்து தயாரித்திருக்கும் படம். படத்திற்கு வசனமும் அவரே எழுதியிருக்கிறார்.மராத்தியில் வெளிவந்து விருதுகள் வாங்கிக் குவித்த டோம்பிவில் பாஸ்ட் என்ற படத்தின் தமிழாக்கம் தான் எவனோ ஒருவன்.
அந்நியன் பார்த்தீருக்கீங்களா...? அதில் வரும் அம்பி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் நம்ம மாதவன் ஏற்று இருக்கும் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத் தலைவனாய் மாதவன். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. அவர் மனைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயாக சங்கீதா.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிபாடங்களும், அரசாங்கமு சுட்டிக் காட்டும் விதிகளைப் பின்பற்றி வாழும் கொள்கையாளன் நம் நாயகன். அதன் மூலம் அவனுக்கு கிடைப்பது சமூகத்தின் கேலிப்பேச்சுக்களும், ஏளன பார்வைகளும் ,பைத்தியக்காரன் என்ற பட்டமுமே.. இருப்பினும் தன் கொள்கையில் நிலையாய் நிற்கிறான் நாயகன். தன் கொள்கையால் தன் குடும்பம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.
இயலாமை ஆற்றாமை என அனைத்தும் ஒரு கட்டத்தில் பொறுமையின் எல்லை தொடும் போது நாயகனின் கோபம் வன்முறையாய் வெடிக்கிறது.. அதன் பின் தொடரும் நாயகனின் நடவடிக்கைகள், நிகழ்வுகள் என முடிந்த அளவில் யதார்த்தம் கலையாமல் சொல்ல முயன்று இருக்கிறார்கள்..
நாயகனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை படத்தின் துவக்கத்தில் ஒரு சில வினாடிகளில்லே பார்வையாளர்களின் மனத்தில் பதியுமாறு செய்து இருக்கும் அந்தப் படத்தொகுப்பு கச்சேரி அருமையிலும் அருமை.. நகர வாழ்க்கையில் நடுத்தர வர்க்கம் பற்றி ஒரு காட்சி கவிதையே வடித்திருக்கிறார் இயக்குனர். அடுக்குமாடி குடியிருப்பு, தண்ணீர் லாரி, தண்ணீர் பிடிக்க நிற்கும் வரிசை, அவசரக் கதி சமையல், காலை நேர நாளிதழ், பழவந்தாங்கல் ரயில் நிலையம், மின்சார ரயில் நெரிசல்,சென்னை வங்கி, டிபன் பாக்ஸ் உணவு, மாலை நேர டீக்கடை...என குறைந்த அவகாசத்தில் சொல்லிவிடுகிறார்.
ஆங்காங்கு நடக்கும் சின்ன சின்ன சட்ட மீறல்கள் பொருட்டு நாயகன் குமைந்தாலும் அதை எதிர்க்க அவன் களம் இறங்குவதில்லை.. ஆனால் தான் அது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகக் கட்டாயப்படுத்தும் போது அவன் அதற்கு இணங்காமல் ஒரு போராளியாக பொங்கியெழுகிறான்.
நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்விகள் தான்.... எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்...எதுக்கு அதிக காசு கொடுத்து சில சலுகைகளைப் பெறணும்... இந்தக் கேள்விகள் நமக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழ பழகிவிட்டோம்.. ஆனால் நம் கதை நாயகனால் அப்படி இருக்க முடியவில்லை...
தலை குனிந்தே பழக்கப்பட்ட மக்களில் எவனோ ஒருத்தன் தலை நிமிர்ந்தால் அவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்தாலும் குடும்பத்தாலும் எப்படி எல்லாம் பார்க்கப்படுகிறான், நடத்தப்படுகிறான் என்பதே படத்தின் பின்பாதி..
இப்படி ஒரு யதார்த்தமானக் கதையைத் தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கியதற்கு தயாரிப்பாளர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வசனகர்த்தா மாதவனும் படத்தின் பல இடங்களில் ஜெயித்திருக்கிறார்.
நடிகர் மாதவனுக்கு வருவோம்....அற்புதமான வாய்ப்பு... தன்னால் இயன்ற வரை அதில் தன்னை வெளிபடுத்தியிருக்கிறார்...குறிப்பாக பிற்பாதியில் வானம் பார்த்து தன் நிலையை கடவுளிடம் அவர் பேசுவதாய் அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில் நடிகர் மாதவனும் வசனகர்த்தா மாதவனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
சங்கீதா... இல்லத்தரசியாக இயல்பான நடிப்பில் வெற்றி கொடி கட்டியிருக்கிறார்.தன்னுடைய சின்ன சின்னக் கனவுகளுக்கு குறுக்கே கணவனின் கொள்கை குறுக்கே வரும் போது மறுகுவதும்... மன்றாடுவதும்... சண்டைப் போடுவதும் என முற்பாதியில் கலக்கும் அவர்... பிற்பாதியில் காணாமல் போன கணவனின் பாதுகாப்பிற்காக உருகுவது என நடிப்பில் நெகிழ செய்கிறார்.
சீமான்... அவருக்கு மிகவும் கனமான வேடம்.. நாயகனைத் தேடி அலையும் காவலதிகாரி வேடம்.. இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே சீமான் என சொல்ல வைக்கிறது. வேட பொருத்தம் கச்சிதம் ஆனால் வாய்ஸ் மாடுலேஷனில் கவனம் செலுத்தியிருக்கணும்... நடிப்பில் சீமான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
காவலர்களின் மனரீதியான பிரச்சனைகள் சீமான் கதாபாத்திரம் மூலம் அலசப்படுகிறது... சீமான் தன் மனைவியிடம் " நான் வாங்குற சம்பளத்துல்ல நீ குடும்பம் நடத்த முடியுமா ?" எனக் கேட்க அதற்கு அவர் மனைவி "முடியும்ன்னு தோணல்ல" என பதில் சொல்வது லஞ்சம் என்பது எத்தனை தூரம் அன்றாட வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது என சுருக்கென தைக்கிறது..
ஓவியம் வரையும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம் படம் நெடுக வரும் இன்னொறு குறிப்பிடத்தகுந்த வேடம்... அந்தச் சிறுவனின் அமைதியான நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது..
சீமானின் மனைவியாக தேவதர்ஷினி, மாதவனின் நண்பனாக ரேடியோ மிர்ச்சி செந்தில் என ஆங்காங்கு தெரிந்த முகங்கள் சின்னஞ்சிறு வேடங்களில் வருகிறார்கள்.
பாடல்கள் இல்லை... படம் முடியும் போது ஒலிக்கும் ஒரு பாடலைத் தவிர..இசை ஜி.வி.பிரகாஷாம்.. பெரிய வேலை இல்லை அவருக்கு. பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமே சார்.
அன்றாட வாழ்க்கை துவங்கி காவல் துறையின் அலட்சியம்,கல்விக் கொள்ளை, மருத்துவத் துறை சீர்கேடு, அரசியல் அராஜகம் என எல்லாவற்றையும் கூடுமானவரை யதார்த்தம் கெடாமல் சாட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். மராத்திய இயக்குனர் நிஷிகாந்த்கு இது தமிழில் முதல் படம். பாராட்டும் படியான முயற்சி. வாழ்த்துக்கள்
காலம் காலமாக தலை குனிந்த பழக்கப்பட்ட சமுதாயத்தில் எவனோ ஒருவன் தலை நிமிர்த்தினாலும் அவன் தலை அழுத்தப்படுகிறது... மீறி அவன் தலை நிமிர்ந்தால் அவன் தலை எடுக்கப்படுகிறது.. அப்படி இருந்தும் காலம் காலமாக எங்கோ எவனோ ஒருவன் தலை நிமிர்த்திக் கொண்டுதானிருக்கிறான்..அவனாலே தான் நம் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்ற ரீதியில் படம் முடியும் தருவாயில் ஒலிக்கும் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது..
கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவமாய் எவனோ ஒருவன் அமைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை...
நிச்சயம் பாருங்கள்... எவனோ ஒருவன் நம்மில் ஒருவன்...
Sunday, December 2, 2007
ராமேஸ்வரம் -யாழ்பணத்திலிருந்து 36 மைல்
போஸ்டரில் பாவனா..தலைப்பில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனையைக் குறிக்கும் வாசகம். பெரும்பான்மையான மக்கள் திரையரங்குக்கு வரக் காரணம் இது தான்.
இலங்கை விட்டு தமிழகம் அகதியாய் வரும் ஒரு இளைஞன் இங்கிருக்கும் ஒரு பெரும் பணக்காரரின் மகளின் காதலில் சிக்குகிறான்(!!!???) காதல் வெல்கிறதா என்பது தான் கதை...
இயக்குனர் செல்வா புதுசு... இசையமைப்பாளர் நிருவும் புதுசு..பாடல்கள் நல்லாயிருக்கு...கேக்கலாம்.. எல்லாரையும் ஏற்றி போக கப்பல் வருமா... எதோ சொன்ன புள்ள..பாடல்கள்..ரசிக்கலாம்.
ஜீவா நாயகன். பாவனா நாயகி. மலையாள லால் ஜோஸ் பணக்கார அப்பா. இது தவிர நாயகனின் தாத்தாவாக மணிவண்ணன், நாயகியின் பாட்டியாக வெண்ணிற ஆடை நிர்மலா, நாயகியின் முறை மாமனாக போலீஸ் வேடத்தில் மெட்டி ஒலி போஸ்...இது தவிர நாயகனின் நண்பர்களாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வேடத்தில் வரும் நடிகர்கள்..அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஸ்னேக் சாந்தி மற்றும் கால் இழந்தவராக வரும் நடிகர் ஒருவர்.
அகதி வாழ்க்கையில் சிக்கி காதலுக்கும் இன உணர்வுக்கும் தாத்தா மீது கொண்ட பாச உணர்வுக்கும் இடையில் உழலும் கதாபாத்திரத்தில் ஜீவா... இயக்குனரின் குழப்பமானத் திரைக்கதை அமைப்பில் இந்த நடிகர் காணாமல் போகிறார்.
பாவனா தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அபத்தமான கதாநாயகி வேடம்.. என்ன பாவடைத் தாவணி, சுடிதார், சேலை என பராம்பரிய உடைகளில் வந்து போகிறார். அழகாய் இருக்கிறார். ஜீவாவைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார்.
லால் ஜோஸ் மலையாள மனிதரை படம் நெடுக வேட்டித் தூக்கி வசனம் பேசும் பெரிய மனிதராக நடமாட விட்டிருக்கிறார்கள். தமிழ் படங்களில் வரும் நாயகியின் தந்தை கம் வில்லன் வேட. இன்னொரு நல்ல நடிகர் அதிகம் வேலை இல்லாத வேடத்தில்
மணிவண்ணன் பாசமானத் தாத்தாவாக சென்டி மெண்ட் பொழிந்து செத்துப் போகிறார். வெண்ணிற ஆடை நிர்மலா கிட்டத் தட்ட சந்திரமுகியில் வரும் பிரபுவின் என்னக் கொடுமை இது சரவணன் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார்.
காதலுக்கு துணையாகவும் குறுக்காகவும் மாறி மாறி அணிவகுக்கும் நண்பர்கள்.. புரியல்லயா...சத்யமாப் படம் பார்த்தப்போ எனக்கும் புரியல்ல...கிட்டத்தட்ட நம்மைப் போலக் குழப்பத்தில் நாயகனும் ஒரு கட்டத்தில் நான் காதலிக்கலாமா என வாய் விட்டு அவர் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிறார்...அப்படி ஒரு குழப்பம்.
என்ன சாமி கதை... ஒரு பணக்கார பொண்ணு வலியப் போய் தன்னை விட வசதி குறைந்த ஒரு பையனைக் காதலிக்குது.. இது நாங்கப் பாக்காதக் கதையான்னு கேக்குறீங்களா?
அதுக்குத் தான் படத்துல்ல விக்குற மேட்டர் ஒண்ணு வச்சிருக்கோம்ல்லன்னு இயக்குனர் சொல்லுறார்....என்னக் கேக்குறீங்களா?
புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரச்சனை....
ஒரு கற்கால தமிழ் சினிமா பார்முலாக் காதல் கதைக்கு ஒரு இனத்தின் பல்லாண்டு கால அழுத்தமான வாழ்க்கைப் பிரச்சனை ஊறுகாயாக பயன்படுத்துள்ளது மிகவும் வருத்தமான விசயம்.
நாயகி நாயகன் மீது காதல் கொள்ள எந்த விதமான அழுத்தமானக் காரணமும் காட்டப் பட வில்லை...என்பதில் துவங்கி...திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள்...
RAMESWARSAM - YET ANOTHER ATTEMPT BY TAMIL CINEMA TO AIMLESSLY EXPLOIT THE SRILANKAN TAMIL ISSUE
Tuesday, November 27, 2007
Casablanca
இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள கேசப்பிளாங்கா என்ற ஊரில் நடக்கும் கதை. புரட்சியாளர்களும் பொதுமக்களும் கேசப்பிளாங்கா வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.
ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக்(Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.
ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.
பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.
முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள். அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.
இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ரிக்-கிற்கும் இல்சாவிற்குமிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது.
ரிக்-காக ஹம்ஃப்ரி போகார்ட்(Humphrey Bogart). வசன உச்சரிப்பும் பாடி லேங்குவேஜும் முகபாவங்களும்...அவரின் ரசிகனாகிவிட்டேன். அதே போல் இங்க்ரிட் பெர்க்மெனின் அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும்.
படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது இங்க்ரிட் பெர்க்மெனின் நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம்.
ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும். இதுவரை நான்கைந்து முறை பார்த்த பின்னும் அலுப்படையவில்லை.
உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் திரைப்படம் Casablanca. மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.
படம் முடிகையில் முகத்திலே ஏற்படும் புன்னகை சில மணி நேரங்களுக்காவது நம்மோடு இருக்கும்.
பில்லா-2007(??) பாடல்கள்
தல'யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பில்லா 2007. ஏற்கனவே SRK நடித்தும் வெற்றி பெற்றது Don என்பது எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தானே. அதுக்கு முன்னாடி வளர்த்தி நடிகர் நடிச்சதாமே. இங்கே அதையே ரஜினி பண்ண, SRK செஞ்சத அஜித் பண்ண வந்திருக்காரு.
இசை: யுவன் சங்கர் ராஜா.
(அதிகமா ரீமிக்ஸ் பாடலகள் செய்திருப்பதாலோ என்னவோ இந்த ரீ மிக்ஸ் படத்திற்கும் இவரையே இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது விஷ்ணுவர்த்தனின் படத்துக்கு இதுவரை இசை அமைத்தவரும் இவரே.(குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் ) மூன்றிலுமே ரீமிக்ஸ் பாடல்கள் கலக்கியது நினைவு இருக்கும்.
இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஒரு தீம் இசை உட்பட.
My Name is Billa - பாடியது நவீன் மற்றும் கே. கே.
இது ஒரு ரீமிக்ஸ் பாட்டு என்பதால் அதிகம் மெனக்கெடாமல் பழைய பாட்டுக்கு புது இசை சேர்த்துள்ளார் யுவன். ஆனால் கிணத்துக்குள்ளே இருந்து பாடுவது மாதிரி ரெகார்டிங். இந்தப் பாட்டை இப்படித்தான் கெடுக்கனும் முடிவு பண்ணி செஞ்சு இருக்காங்க. Sound Recordingல் பாடல் கேட்பதே இல்லை, வெறும் சத்தம் தான்..(1.5/5)
செய், ஏதாவது செய்: பாடியது நித்யா ஸ்ரீ மஹாதேவன்.
ஏதோ ஒரு ஐட்டம் பாட்டு போல் இருக்கு. கேட்க நல்லாவும் வார்த்தைகளில் கொஞ்சம் அளவும் மீறி இருக்காங்க. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் இன்னொரு பாடல். Sounds like தீ தீப்பிடிக்க remix. Nothing Special(1.5/5)
Theme Music- Yuvan Sankar Raja.
கேட்க நல்லா இருக்கு, கிதார் உபயோகப்படுத்திய விதம் அருமை. பழைய கிதார் இசையை electronic கிதாரில் கொண்டு வந்த விதம் புதுசு.
நான் மீண்டும் நானாக வேண்டும்: பாடியது தீபிகா.
மேலும் ஒரு ஐட்டம் பாடல். விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் விஷேசம் இல்லாத பாடல் (1/5). கிதார் விளையாட்டு இதிலும் உண்டு. அதனால தான் 1/5, இல்லைன்னா (0/5)
சேவல் கொடி: பாடியது விஜய் ஜேசுதாஸ்.
இந்தப் படத்தில் முதன்மையான பாடல் இதுதான். முருகனை போற்றிப் பாடுமாறு அமைந்திருக்கிறது இந்தப்பாடல். அநேகமான யுவனின் குத்து பாடல்களில் முதல் 5 க்குள் வரும்படியான பாட்டு. அதேபோல் முருகனைப் போற்றி பாடிய பாடல்களில், சூப்பர் குத்துப் பாட்டு இதுவாகத்தான் இருக்கும். குத்துன்னா குத்து... செம குத்து. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாட்டு இது. அதுவும் அஜித்க்கு intro பாட்டா இதுவே இருந்தா பிரமாண்டமான ஓப்பனிங்கா இருக்கும். (4/5)
வெத்தலைய போட்டேண்டி: பாடியது ஷங்கர் மஹாதேவன்
இன்னும் ஒரு ரீமிக்ஸ் பாடல் மாதிரி ஆனா ரீ மிக்ஸ் இல்லை. கொஞ்சம் குத்து கொஞ்சம் மேற்கத்திய இசைன்னு கலக்கிய விதம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கு. (2.5/5)
ஆக மொத்தம் பில்லா பாடல்களுக்கு கீத்துக்கொட்டாய் குடுக்கும் மதிப்பெண் * * (2/5)
Friday, November 23, 2007
அழகிய ''காப்பி" மகன்
முடியல்ல.....ம்ம்ம்ம்...முடியல்ல.. ஸ்ப்பா இப்பவேக் கண்ணைக் கட்டுதே
எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாக்க மாட்டோமோ...
Wednesday, November 21, 2007
Anukokunda Oka Roju
வழக்கமான மசாலா கதைகளைத் தவிர்த்து வித்தியாசமான கதையுடன் சுவாரசியமான நெருடலில்லாத திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் Anukokunda Oka Roju.
சஹஸ்ரா பின்னணி பாடகி. கல்லூரி மாணவி. ஒரு நாள் தன் தோழியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு அவருக்குத் தெரியாமல் நண்பர்கள் அவருக்கு போதை மருந்து தந்துவிடுகிறார்கள். சஹஸ்ரா அங்கிருந்து தானாகக் கிளம்பிவிடுகிறார். வீட்டிற்கு வந்து தூங்கி விழிக்கும் சஹஸ்ரா இரண்டு நாட்கள் கடந்துவிட்டதை உணர்கிறார். தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்கிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து அவரை ஒருவன் கொலை செய்ய முயற்சிக்கிறான். தான் சுயநினைவு இழந்த அன்று ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்கிறார் சஹஸ்ரா. அன்று தன்னை வீட்டில் விட்ட டாக்ஸி டிரைவர் உதவியுடனும், போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு உதவியுடனும் பல்வேறு துப்புகளைப் பின் தொடர்ந்து அன்று என்ன நடந்ததெனக் கண்டுபிடிக்கிறார்கள்.
படத்தின் முற்பாதியில் காமெடியாகவும் பின்னர் சஹஸ்ராவிற்கு அன்று என்ன நடந்ததென சஸ்பென்ஸை எழுப்பிவிட்டு பிற்பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து சுவாரசியமாக படமாக்கியிருக்கிறார்கள்.
சஹஸ்ராவாக 'காதல் அழிவதில்லை' புகழ்(?!)சார்மி. படத்தின் ஆரம்பத்தில் ஜாலியான கல்லூரி மாணவியாகவும் பின்னர் ஒரு நாள் என்ன நடந்ததெனத் தெரியாமல் தவிப்பதிலும் அம்மணி வெளுத்துக் கட்டியிருக்கிறார். அவர் நடித்து நான் பார்த்த இரண்டு மூன்று படங்களில் இந்த படத்தில் ரொம்பவே அழகாகயிருக்கிறார். சிறப்பாக நடித்திருக்கிறார்.
சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெகபதி பாபு. தெனாவெட்டான கதாபாத்திரத்திற்கு மனிதர் கச்சிதமாகப் பொருந்துகிறார். நக்கலான டைமிங் டயலாக்குகளும் பின்னர் சார்மியை ஈர்ப்பதற்காக அவர் செய்யும் சில்மிஷங்களும் கலக்கல்ஸ் ஆப் ஹைதராபாத். டாக்ஸி டிரைவராக நான் இதற்கு முன்னர் பார்த்தேயிராத ஹீரோ. பெயர் சஷாங்க்-காம். நன்றாகவே நடித்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் சஹஸ்ரா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் நடக்கும் காமெடி காட்சிகள் படு ஜாலி. அதிலும் தம்முடு வாத்தியார் ஒருவர் கலக்கியிருக்கிறார். அரைகுறை ஆங்கிலத்தில் அனைவரிடமும் ஆப்பு வாங்குவதில் ஸ்பெஷலிஸ்ட். ஆங்கிலத்தை பிச்சி உதறுவார். ஒரு உதாரணம் - 'You dance. I glance'. ஒரு ஹிந்தி ஆண்ட்டியுடன் இவர் சண்டை கட்டும் காட்சிகள் செம காமெடி.
நாயகி பின்னணி பாடகி. ஆனாலும் பாடல்கள் ஓகே ரகம் தான். த்ரில்லர் படமென்று காட்சிகளைத் த்ரில் ஆக்குவதாக நினைத்து பின்னணி இசையை ஓவர் இரைச்சல் ஆக்காமல் சிறப்பாகவே அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஜாலியான வசனங்கள் படத்தின் பெரும்பலம். மிகவும் சீரியசான காட்சியில் கூட யாராவது டைமிங் ஜோக் அடிக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கி அதற்கேற்றவாறு சற்றும் தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் அனுகொகுண்ட ஒக்க ரோஜு - மன்ச்சு ஃபிலுமு.
Sunday, November 18, 2007
One Flew Over the Cuckoo's Nest
ராண்டல் மெக்மர்ஃபி என்னும் குற்றவாளி சிறைச்சாலை வேலைகளிலிருந்து தப்பிப்பதற்காக பொய்யாக மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான். அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். சிலர் தாமாகவே அங்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேட்சட் என்னும் நர்ஸ் அந்த காப்பகத்தின் நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிருக்கும் கண்டிப்பான நர்ஸாக இருக்கிறார். ஒவ்வொரு நோயாளியையும் அவர்கள் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று சித்தாந்தம் பேசும் மெக்மர்ஃபி ரேட்சட்டின் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். ரேட்சட் அவர்களை யோசிக்கவே விடாமல் மனநோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் மெக்மர்ஃபி. ரேட்சட்டுடன் சண்டை போடுவதும், சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதும் மற்ற நோயாளிகளை அவன்பால் ஈர்க்கின்றன. அவனிடம் நட்பு கொள்கின்றனர். வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமைசெவிடனாக நடிக்கும் சீஃப் என்ற நோயாளி மெக்மர்ஃபியுடன் நெருங்கிப் பழகுகிறான்.
அத்தனை நாட்களாக ரேட்சட்டின் கட்டுப்பாட்டில் நோயாளிகள் போல் வாழ்ந்த அவர்கள் பயத்தைக் குறைக்கின்றான். இதனால் ரேட்சட்டுக்கும் மெக்மர்ஃபிக்கும் சண்டை வலுக்கிறது. ரேட்சட் இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் மெக்மர்ஃபி தப்பி ஓட முடிவெடுக்கிறான். தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். அடுத்த நாள் அத்தனை பேரும் ரேட்சட்டிடம் சிக்கிவிடுகின்றனர். அப்போது ரேட்சட்டிற்கும் மெக்மர்ஃபிக்கும் இடையில் தக்ராறு ஏற்பட்டு மெக்மர்ஃபி ரேட்சட்டைத் தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு Lobotomy செய்யப்படுகிறது. மூளையின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் சீஃப் ஒரு விடியலில் மெக்மர்ஃபியைக் கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.
திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சுதந்திரமாக சந்தோஷமாகக் கழிக்கும் மெக்மர்ஃபி, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் ரேட்சட், மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.
மெக்மர்ஃபியாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). தலைவரின் நடிப்பைப் பற்றி ஒன்றுமே சொல்ல வேண்டாம். ஆஸ்கர் விருது வாங்கித் தந்த கதாபாத்திரம். அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள்.
நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். மெக்மர்ஃபி மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் சீஃப் அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சி என படம் நெடுக நம்மை ஒன்றச் செய்யும்.
மெக்மர்ஃபி காப்பகத்திலுள்ள மனநோயாளிகளிடமும் படம் பார்க்கும் நம்மிலும் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது. One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
Tuesday, November 6, 2007
பாசத்தமிழனாக சூர்யாவின் வேல்
ஹலோ சூர்யா தள்ளி நில்லுங்க இது உங்க படம் இல்ல புரியுதா?
சரி இனிமே விமர்சனத்துக்குப் போலாம் ரைட்டா
தீவாளிக்கு என்னப் படம் போலாம்ன்னு யோசிச்சு கொஞ்சம் முன் ஜாக்கிரதையா முடிவெடுத்துப் போனப் படம் நம்ம சூர்யா & சூர்யா நடிச்ச வேல் படம் ... ரெண்டு சூர்யாங்க.. ரெண்டும் நம்ம ஜோவின் சூர்யா தான்.. எஸ்.ஜே.சூர்யாவோடு போட்டு குழப்பிக்காதீங்க...
படத்தோட இயக்குனர் ஹரின்னு தெரிஞ்சதும் கதையும் தெரிஞ்சுப் போச்சு... போஸ்ட்டர் மற்றும் ட்ரெயிலர்களில் படத்தை தீபாவளிக்கு முன்னாடியே பலத் தடவைப் பார்த்து பழகிய பின்னும் தியேட்டருக்கு வேற போயிட்டோம் இல்ல.
ஒரு காலத்துல்ல வில்லனா அசத்துன சரண்ராஜ் இந்தப் படத்துல்ல அடக்க ஒடுக்கமான அப்பா...என்னக் கொடுமை சார் இது.. அவருக்கு மனைவியாக சூர்யாஸ் அம்மாவாக தவமாய் தவமிருந்து புகழ் அம்மா சரண்யா
ட்ரெயின்ல்ல நகையைத் தொலைப்பாங்க... பணத்தைத் தொலைப்பாங்க.. நம்ம வேல் படத்துல்ல சரண்ராஜூம் அவர் மனைவியும் குழந்தையைத் தொலைக்கிறாங்க.. ஆதி காலத்து ஜெய்சங்கர் படங்கள் ஞாபகம் வரும் விதமாக..
ஒரு சூர்யா சிட்டி கையாவும்... இன்னொரு சூர்யா கிராமத்தில் பெரிய கை யாகவும் வளர்ந்து வாழுகிறார்கள்.
சிட்டி கை சூர்யா..ஒரு துப்பு துலுக்கும் அலுவலகத்தில் முக்கிய புள்ளியாக டூட்டி பார்க்கிறார்..அதே சமயத்தில் ஸ்கூட்டியில் வரும் பியூட்டி அசினோடு டுயட் பாடுகிறார்..
சொக்கம் பட்டி கை சூர்யா.. காக்க காக்க ஜீப் மாடலில் ஒரு ஜீப்பில் ஏறி ஐசக் நியூட்டன் அரும்பாடு பட்டு கண்டுபிடித்த அனைத்து இயற்பியல் விதிகளை அநியாயத்துக்கு நக்கல் அடிக்கிறார்.. நோ வாக்கிங்... கிராமத்து அறிமுகமே பிளையிங் தான்....ஹரி படங்களின் முக்கிய கதாபாத்திரமான அருவாள் இதில் கிராமத்து சூர்யா மற்றும் அவர் அடியாட்கள், சூர்யாவை எதிர்க்கும் வில்லன் கோஷ்ட்டியோட படம் முழுக்க மற்றும் ஒரு முக்கிய ரோலில் கிழி கிழி எனக் கிழிக்கிறது.
கிராமத்துச் சூர்யாவுக்கும் அவரைத் தத்து எடுத்த குடும்பத்துக்கும் நிரந்தர தலைவலி தரும் வில்லனாக கலாபவன் மணி.. அவருடைய் வழக்கமான சேட்டைகள் கொஞ்சம் கம்மி தான் இந்தப் படத்தில்.
இந்தப் பிரச்சனை ஒரு புறம் என்றால்.. குழந்தையைத் தொலைத்த அம்மாவின் பாசம் என இன்னொரு பக்கம் கதையை நகர்த்துகிறார் ஹரி... கதையின் இடைவேளையில்... சாரி படத்தின் இடைவேளையில் இரண்டு சூர்யாக்களும் நேருக்கு நேர் சந்திக்க பாசப் போராட்டமாய் படம் ட்ராக் மாறுகிறது..
இரட்டை வேடக் கதைகளுக்கே உரித்தான ஆள் மாறாட்டம்..அதன் மூலம் ஒருவர் பிரச்சனையை ஒருவர் தீர்ப்பது என அமைக்கப்பட்ட இலக்கணத்தை கடைப்பிடித்து படம் போகிறது. இறுதியில் நன்மை வெல்கிறது தீமை சாய்கிறது சுபம்.. இது தான் வேல்
சூர்யாவுக்கு இரட்டை வேடம்.. அதிகம் வித்தியாசம் எல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லாத இரட்டை வேடம். காக்க காக்க ஜிப்பில் ஏறி போனத் தடவை துப்பாக்கி தூக்கிய சூர்யா இந்த முறை அதே ஜீப்பில் ஏறி அருவாள் தூக்குகிறார். மொறைப்பும் விறைப்புமாகத் திரிகிறார். அசினை அளவோடு காதலிக்கிறார்.பாசக்காரப் பயலாக பெத்த அம்மா அப்பா, வளர்ப்பு குடும்பம் என மொத்தப் பேரிடம் பொங்குகிறார். மத்தப் படி சொல்லிக்கிற மாதிரி பெரிய வேலை எல்லாம் அவருக்கு இல்லை.
அசினுக்கும் பெரிய வேலை. சூர்யாவைக் காதலிக்கணும். ஆடணும் பாடணும். போஸ்டருக்குப் போஸ் கொடுக்கணும். அதை செய்துவிட்டு போகிறார்.
பாசமழையைக் கண்டப் படி பொழியும் கதாபாத்திரங்களில் சரண்யா, சரண்ராஜ், லட்சுமி,ராஜ்கபூர் மற்றும் பலர். வில்லன் கலாபவன் மணிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா. சார்லி மற்றும் வையாபுரிக்கு சின்ன வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
படத்தில் முக்கியமான வேடத்தில் வடிவேலு...வழக்கமான பாணி காமெடி என்றாலும் சிரிக்க வைக்கிறார். அறிமுக காட்சியில் இருந்து அவர் அலம்பல் ஆரம்பம் ஆகிறது.
பாடல்கள் யுவன் ஷங்கராம்..நம்ப முடியவில்லை...பாடல்கள் ஹரியும் எழுதியிருக்கிறாராம்....கேட்டாலே சும்மா அருவாள் எடுத்து முதுகைத் தேய்க்கணும் போலிருக்கு..
படத்துக்கு நடன அமைப்பாளர் கிடைக்கல்லயா இல்ல ஷீட்டீங் அன்னிக்கு லீவ்ல்ல போயிட்டாரான்னு தெரியல்ல.. அதுவும் அந்த வெளிநாட்டு பாடல் காட்சியில் ஆட்டமே ஆடுகிறதுன்னாப் பாருங்க..
மொத்தத்தில் வேல் ஒரு கீத்துக்கொட்டா முன் வரிசை ரசிகன் என்ன எதிர்ப்பார்ப்பானோ அதை கொடுக்க முயற்சி பண்ணி இருக்கார் ஹரி.
பிகு: இந்த படத்தில் முதல் முறையாக சூர்யாவும் பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி பல்ஸ் எகிற வைத்திருக்கிறார்.
Friday, October 26, 2007
Eternal Sunshine of the Spotless Mind
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......
பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...
வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....
அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..
என்ன செய்ய?
அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!
-காயத்ரி
வாழ்க்கையையும் அடித்து எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?
ஜோயலும் க்ளெமென்டைனும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் க்ளெமென்டைன் ஜோயலுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள். லகுனா(Lacuna Inc.) என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்து அவ்ர்கள் மூலமாக ஜோயல் குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.
இதை நண்பர்கள் மூலம் அறியும் ஜோயல் தானும் அதே நிறுவனத்தின் மூலமாக க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் க்ளெம்ன்டைனுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் க்ளெம்ன்டைனை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான். அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் ஜோயலும் மீண்டும் இணைவார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க. இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.
படத்தில் ஜோயல்-க்ளெமென்டைன் காதலைத் தவிர லகுனா நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை. அதேபோல் க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழித்த பேட்ரிக் அவள்பால் ஈர்க்கப்பட்டு க்ளெமென்டைன் லகுனா நிறுவனத்திடம் ஒப்படைத்த ஜோயலின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.
கதாநாயகன் ஜோயல் ஆக ஜிம் கேரி(Jim Carrey) நடித்திருக்கிறார். ஜிம் கேரியின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட ஜோயல் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும்போதும் ஆழ்மனதின் மூலமாக க்ளெமென்டைனின் நினைவுகளை அசைபோடும்போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கேட் வின்ஸ்லெட்(Kate Winslet) க்ளெம்ன்டைனாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. க்ளெம்ன்டைன் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நட்க்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.
ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத அமரும்பொழுது இந்த படம் குறித்த நினைவுகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா...
Tuesday, October 9, 2007
கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ.
கற்றது தமிழ் இயக்குனர் ராமின் கேள்வி இது? கேள்வியில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா..இயலாமையா...பொறாமையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கெ விட்டு விடுகிறேன்..
ஜீவா..தமிழ் திரையுலகின் புதிய தலைமுறை நடிகர்களில் கொஞ்சம் பரீச்சதார்த்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்..அவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கற்றது தமிழ்..
பிரபாகர் என்ற தமிழ் படித்த முதுகலைப் பட்டதாரியின் துயரம் நிறைந்த வாழ்க்கையை திரையில் இயக்குனர் யதார்த்தமாய் சொல்ல முயன்றுள்ளார்.
அகால மரணங்களின் ஒரு மொத்தத் தொகுப்பாய் பிரபாகரின் சிறுவயது கழிகிறது...அதனால் மனம் பாதிக்கப்படும் பிரபாகரின் பாலைவன வாழ்க்கையில் பூக்கும் ஒரே வசந்தம் அவன் சிறு வயது தோழி ஆனந்தி.. ஆனந்தியின் வாழ்க்கையிலும் ஆனந்தமில்லை.. அவ்வப்போது வந்துப் போகும் சந்தோசச் சாரல் பிரபாகர் மட்டுமே..
பிரபாகர் தமிழ் படிக்கிறான்... தமிழின் மீதான பாசமா..பற்றா... அழுத்தமானக் காரணம் இல்லை.. அவனை ஆளாக்கும் தமிழய்யாவின் மீது கொண்ட பற்று எனக் கொள்ளலாம்..
தமிழ் படித்தும் பிரபாகரின் துயரங்கள் தீராது நீள்கிறது..இதனால் பிரபாகரின் மனபிறழ்வு அதிகரிக்கிறது..
அவ்வபோது பிரபாகரின் வாழ்க்கையில் வந்துப் போகும் ஆனந்தியைத் தன் வசப்படுத்த பிரபாகர் தனக்குள்ளே போராடுகிறான்.. எல்லாப் போராட்டங்களும் தோல்வி என்னும் ஒரே புள்ளியில் கொண்டு போய் குவிக்க...ஒரு கட்டத்தில் போலீஸிடம் சிக்கி தெருவில் அடிபடுகிறான்.. சிறைக்குச் செல்கிறான்...தற்கொலைக்கு முயல்கிறான்.. தன் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைத் தேடி தனக்குள் குமுறுகிறான்..சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்யும் பிரபாகர்.. தொடர்ந்து கொலைகள் செய்வதில் ஆனந்தம் கொள்கிறான்....
ஜீவா.. புதிய தலைமுறை தமிழ் நடிகர்களில் பரிச்சார்த்தமான முயற்சிகளில் உற்சாகமாய் ஈடுபடும் ஒரு நடிகர்.. படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். அதன் பலன் நன்றாகவே திரையில் தெரிகிறது..அவரது முந்தைய படங்களில் ஒன்றான ராமில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் சாயல் கொண்ட பாத்திரமே இந்தப் படத்திலும்.. ஆனால் நன்றாகவே மாறுபடுத்திக் காட்டுகிறார்..
இப்படி மனக்குழப்பங்களின் உச்சத்தில் வாழ்க்கையை நகர்த்தும் இளைஞன் பிரபாகரின் மொத்தக் கோபமும் ஐடி பிபிஓ மக்கள் மீது திரும்புகிறது.. இப்போது பதிவின் முதல் வரியைத் திரும்பப் படிங்க...
ஆனந்தியாக புதுமுகம் அஞ்சலி.. குழந்தைத் தனமான அழகு...அவ்வபோது வந்து போகிறார்..நல்லதொரு தேர்வு.. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஜீவாவிடம் அவர் நிஜமாலும் தான் சொல்லுறீயா.. எனக் கேடபது... ம்ம்ம்ம் என ஜீவா தலையாட்டுவது ரசனைக்குரிய காட்சிகள்.
தமிழ் வாத்தியாராக வரும் அழகம்பெருமாள் நெல்லைச் சீமைத் தமிழை வெளுத்து வாங்குகிறார். நல்ல தேர்வு.
காமெடிக்கு கருணாஸ்...ஜீவாவின் சொந்தக் கதையைக் கேட்டு வீடியோவில் பதிய ஜீவாவால் கடத்திவரப் பட்ட வீடியோகிராபராய் வருகிறார்..கருணாஸின் டைமிங் கமெண்ட்கள் புன்னகைக்க வைக்கின்றன.. அதிலும் ஜீவா அவரிடம் எதாவது புரியுதான்னு அடிக்கடி கேட்க அதற்கு கருணாஸ் கொடுக்கும் பதில்கள் கிட்டத்தட்ட தியேட்டரில் இருக்கும் ஆடியன்சின் ரெஸ்பான்சை ஒத்துப் போகிறது..
யுவனின் பாடல்களில் குறிப்பாக இளையராஜா பாடும் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை ஓ.கே..
கேமரா பாராட்ட வேண்டிய விசயம்.. படம் பல இடங்களுக்கு பயணிக்க கண்களுக்கு இதமாக அந்த பயணம் அமையும் படி கேமராப் பார்த்துக் கொண்டிருக்கிறது... அசத்தல்.
இயக்குனர் ராம் அவர்களுக்கு... கற்றது தமிழ் மூலம் நீங்கள் சொல்ல வந்தது என்ன? பிரபாகரின் சொந்தச் சோகங்களையா? பிரபாகர் - ஆனந்தியின் காதலையா? இல்லை ஐடி...பிபிஓ மக்கள் மீது உங்களுக்கு எழுந்துள்ள அடிப்படையற்ற கோபத்தையா? புரியவில்லை...
ஐடி, பிபிஓ மக்களைக் குறிவைத்து வைக்கப்பட்டிருக்கும் நையாண்டி காட்சிகளுக்கு மற்ற துறை மக்களின் கைத்தட்டல்கள் ஒரு வேளை கிடைக்கலாம்...
மொத்தத்தில் கற்றது தமிழ் - சிலபஸில் குழப்பம்
படம் முடிஞ்சு வெளியே வரும் போது காதில் விழுந்தது... ராப்பகலா ஒரு வாரம் பொட்டியத் தட்டிகிட்டு உக்காந்து இருந்துட்டு வீக் என்ட்ல்ல ரிலாக்ஸா படம் போலாம்ன்னு வந்தா... மாப்பி இவன் போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டான்டா...
Tuesday, October 2, 2007
12 Angry Men
ஒரு ஸ்பானிய இளைஞன் தன் தந்தையைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறான். சாட்சிகளும் ஆதாரங்களும் அவனுக்கெதிராக இருக்கின்றன. அவன் தொலைத்ததாக சொல்லும் கத்தி கொலை நடந்த இடத்தில் கிடைக்கிறது. ஆனால் அவனோ குற்றத்தை மறுக்கிறான். வழக்கு முடிந்ததும் நீதிபதி 12 நடுவர்களை வழக்கு குறித்து முடிவெடுக்கச் சொல்கிறார். குற்றவாளியென நடுவர்கள் முடிவு செய்தால் அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி. நடுவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சாட்சிகள் அந்த இளைஞனுக்கு எதிராக இருப்பதால் பதினோரு நடுவர்களுமே அவன் குற்றவாளி என ஏகமனதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமிருப்பதாகவும் அவன் நிரபராதியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார். வழக்கு விசாரனையில் தனக்கு திருப்தியில்லை எனவும் அந்த இளைஞன் தவறுதலாக தண்டிக்கப்படக் கூடாதென்றும் கூறுகிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நடுவர்கள் வழக்கு குறித்து் தீர ஆராய வேண்டுமென்கிறார்.
மற்ற நடுவர்கள் விவாதிப்பது நேர விரயம் எனக் கூறி மறுக்கின்றனர். அந்த இளைஞன் கொலை செய்தது குறித்து தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர். அவரோ அந்த இளைஞன் சார்பான வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி அவற்றை முன் வைக்கிறார். விவாதத்தினிடையே நடுவர்களிடையே வாக்குவாதங்களும் சிறு மோதல்களும் நிகழ்கின்றன. வழக்கு குறித்து பேசப் பேச ஒவ்வொரு நடுவர்களாக மனதை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவன் குற்றவாளியென நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென அந்த இளைஞனை விடுதலை செய்ய முடிவெடுக்கின்றனர்.
இந்த எளிமையான கதையின் பலமே நடுவர்களாக வரும் 12 கதாபாத்திரங்கள்தான். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 12 கதாபாத்திரங்களும் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் பின்புலமும் இந்த வழக்கு குறித்த அவர்களது பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதை மிகச் சிறப்பாக படம்பிடித்திருப்பார்கள். வெற்றிகரமான தொழிலதிபர் முதல் வாழ்வில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஏழை வரை, இனவெறியாளன் முதல் மிகவும் கனிவான கதாபாத்திரம் வரை என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். வழக்கு குறித்த விவாதத்தினிடையே நடுவர்களுக்குள் தனிப்பட்ட மோதல்களும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடுவர்கள் குழுக்களாக சார்புநிலை எடுப்பதும் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
அதே போல் கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே வசனங்கள் அமைந்திருக்கும். அந்த இளைஞனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்களில் நம்மையே ஒரு சார்பை எடுக்க வைக்கும் அளவுக்கு வசனங்களும் காட்சியமைப்புகளும் கூர்மையாக இருக்கும். நடுவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.
1957-இல் வந்த இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் திரையிடப்படுகின்றது. இரண்டு மணி நேரம் ஒரே அறையில் 12 பேர் பேசிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியுமென்றால் இந்த படம் கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒன்று.
Sunday, September 23, 2007
மருதமலை
தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்,
இயக்கம் தலைநகரம் படப் புகழ் சுராஜ்,
இசை இமான்,
நடிப்பு அர்ஜூன், வடிவேலு, நாசர்,ரகுவரன், லால், நிலா, மற்றும் பலர்.
கமர்ஷியல் சினிமாவுக்கென்று ஷோலே வகுத்துக் கொடுத்த இலக்கணத்தின் படி எடுக்கப்பட்டிருக்கும் படம்.
நாச்சியார்புரம் என்றொரு கற்பனையூர், அங்கு 16 ஆண்டுகளாக தேர்தல் நடப்பதில்லை, காரணம் சாதிப் பிரச்சினை. பெரும்பான்மை உயர்சாதியைச் சேர்ந்த மாசி(மலையாள நடிகர் லால்) என்ற தனிமனிதன் சட்டத்தைத் தன் கட்டுக்குள் வைத்து அட்டுழியம் செய்கிறான். இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ரகுவரன் எப்படியும் நாச்சியார்புரத்தில் தேர்தல் நடத்துவதாய் சவால் விட்டு களம் இறங்குகிறார். வெட்டு குத்து என ரத்தவெள்ளத்தில் படம் நகர்கிறது.
இதில் கதாநாயகனுக்கு என்ன வேலை எங்கே வருகிறான்னு கேக்குறீங்களா? சொல்லுறேன்..
நம்ம நாசருக்கு ஒரு பையன் அர்ஜூன், அப்பா ஆசைப் படி சட்டம் படித்து வக்கீல் ஆகாமல் கான்ஸ்டபிள் ஆகிறார். அவருக்கு போஸ்டீங் நாச்சியார்புரத்தில் தான் போடுறாங்க. அப்புறம் என்ன வழக்கம் போல் அமைதியாகப் போகும் நாயகன் வாழ்க்கையில் புயலாய் வில்லன் நுழைய போராட்டத்தில் அப்பாவி அப்பா பலியாக... டாமல் டூமில் ட்ஷ்யூம் என படம் பறக்கிறது.
இதுல்ல கதாநாயகி எங்கே இருந்து வர்றா அப்படின்னு யோசிக்கிறீங்களா?
அதெல்லாம் தப்பு..
படத்துக்கு மியூசிக்க்குன்னு ஒருத்தரை புக் பண்ணி பாட்டுக்குன்னு கவிஞர் எல்லாம் ரெடி பண்ணி பாட்டெல்லாம் போட்டப் பொறவு.. நம்ம அர்ஜூன் கூட ஆட யாராவது வேணாமா? அதுக்குத் தான் நிலா இருக்காங்க.. வர்றாங்க... ஒட்டுறாங்க.. ஆடுறாங்க.. பாடுறாங்க... போறாங்க.. இன்னொரு புதுமுகம் வேற ஒரு பாட்டுக்கு வந்து ஆடிட்டு போறாங்க..இது தவிர முகைமது கான் குத்தாட்டம் வேற இருக்குதுங்கோ
இப்படி எல்லாமே வழக்கமா இருக்கப் படத்துல்ல என்னத் தான் ஈர்ப்பு இருக்குன்னு கேக்குறீங்களா..
நம்ம வைகைப் புயல் காமெடிங்க...
அர்ஜூனுக்கு மேலதிகாரியா அதாவது இவர் ஏட்டு அவர் காவலர். வந்து வடிவேலு பண்ற அலம்பல் இருக்கே நல்லாச் சிரிக்கலாம்.. பிற்பாதியிலே அர்ஜூன் இன்ஸ்பெக்டராகி இவருக்கு மேலதிகாரியா வரும் போது அவர் பம்மல் இன்னும் காமெடி.. மருதமலையின் ஹய்லைட் காமெடி தான்.. நல்லாவே இருக்கு.
இசை ஒரே குத்து மயம்..கதை திரைக்கதை எல்லாம் அரைச்ச மாவு தான்...
அர்ஜூன் இன்னும் தன் தோற்றத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணுவது சபாஷ், சண்டைக் காட்சிகளில் தான் இன்னும் ஆக்ஷன் கிங் தான்னு நிருபீக்கிறார். காமெடியிலும் வடிவேலுவோடு கலந்து கட்டுகிறார்.
ரகுவரன், நாசர் , ராஜேஷ் சொல்ல ஒன்றும் புதிதாக இல்லை. அனுபவ நடிப்பால் பாத்திரங்களை நிறைக்கிறார்கள்.
மலையாள நடிகர் லால் வில்லத்தனத்தில் கம்பீரம் காட்டுகிறார். சண்முகராஜன், மெட்டி ஒலி போஸ் வழக்கமான் வில்லன் மேளாவில் பங்குபெறுகிறார்கள்.
கீத்துக்கொட்டாய் தீர்ப்பு ...மருதமலை.. டைம் பாஸ்.. பொழுது போகும்... நல்லா சிரிச்சுட்டு வரலாம்...
Wednesday, September 12, 2007
அம்முவாகிய நான்
வழக்கமான மசாலா திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு சொல்லப்படாத கதைகளை படமாக்கும் போது அது இயல்பானதாக இருக்க வேண்டுமேயன்றி வித்தியாசமாக படம் எடுக்கிறோம் பேர்வழி என்று கதைக்களத்தில் இருந்து பிறழ்ந்தால் பார்வையாளனுக்கும் திரையில் ஓடும் காட்சிகளுக்குமான தொலைவு அதிகரித்துவிடுகிறது. பல நல்ல கதைகள் இது போன்ற 'வித்தியாசமாக எடுக்கிறேன்' ஆர்வக்கோளாறின் காரணமாகவே மோசமான திரைப்ப்டங்களாக உருவாகியுள்ளன. அந்த வகையில், படத்தில் பார்த்திபன் இருந்தாலும், 'அம்முவாகிய நான்' படத்தில் வித்தியாசங்களை வலியத் திணிக்காமல் இயல்பான ஒரு திரைப்ப்டத்தைத் தந்திருக்கும் இயக்குனர் பத்மாமகன் பாராடடப்பட வேண்டியவர்.
அம்மு குழந்தையாக இருக்கும்போதே பாலியல் தொழிலாளியான இராணியிடம் விற்கப்படுகிறாள். ராணி மடத்தில் பாலியல் தொழிலாளிகளிடையே வளரும் அம்மு தானும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை தன் நாவல்களின் மூலம் பதிவு செய்யும் எழுத்தாளர் கெளரி சங்கர் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை நாவலாக வடிக்கும் முயற்சியாக ராணி மடத்திற்கு வருகிறார். அங்கு அம்முவின்பால் ஈர்க்கப்படுகிறார். அம்முவை மணக்க விரும்புகிறார். முதலில் மறுக்கும் அம்மு பின்னர் தன் தோழிகளின் அறிவுரையின் பேரிலும் கெளரிசங்கரின் அன்பாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணம் முடிந்ததுமான அவர்களது வாழ்க்கை அழகான கவிதை.
கெளரிசங்கரை வளர்த்த அக்காவாலும் அம்முவுக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாலும் சிறுசிறு பிரச்சனைகள் வருகின்றன.கெளரிசங்கர் தன் லட்சிய நாவலை முடித்து விருது தேர்வுக்கு அனுப்புகிறார். முன்பொரு முறை அம்முவினால் அவமானப்படுத்தப்பட்ட எழுத்தாளர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார். அதனால் கெளரிசங்கருக்கு விருது கிடைப்பதில் இடையூறு. இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித் திரையில் காண்க.
படத்தின் பெரும்பலம் கச்சிதமான காட்சியமைப்பு. வில்லன் வரும் காட்சிகளைத் தவிர மற்ற எதுவுமே சலிப்பூட்டவில்லை. நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் கூர்மையான வசனங்களும் பெரும்பலம். பல இடங்களில் புனசிரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிக்க வைக்கிறது. 'ராணி மடம்' என்ற பாலியல் தொழிலாளர்களின் வீட்டைக் காட்டும்போது வழக்கமான தமிழ் சினிமா போல் விரசக் காட்சிகளோடும் அவர்களை கழிவிரக்கம் மிக்கவர்களாகவும் காட்டாததற்கு பத்மாமகனிற்கு ஒரு பெரிய ஓ!!
ஆனாலும் கதாபாத்திரங்கள் உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக முக்கிய கதாபாத்திரமான அம்முவே ஒரு காட்சியில் குழந்தைத்தனமாகவும் அடுத்த காட்சியில் மன முதிர்ச்சியோடு பேசுவது சிறிது நெருடுகிறது. அம்மு-கெளரிசங்கர் மணவாழ்க்கைக்கு ஒரு மசாலா பட வில்லன் கதாபாத்திரத்தால்தான் பிரச்சனை வரவேண்டுமா என்ன? வேறெதாவது யோசித்திருக்கலாம்.
அம்முவாக நடித்திருக்கும் பாரதி அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். கண்கள் அப்படியொரு அழகு. அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம். பார்த்திபனுக்கு அவருக்கேற்ற 'டெம்ப்ளேட்' கதாபாத்திரம். 'அண்டர்ப்ளே' செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இசை சபேஷ்-முரளி. 'உன்னைச் சரணடைந்தேன்' என்று ஆரம்பித்து எழுதிக்கொடுத்தால் நன்றாக இசையமைப்பார்கள் என்று நினைக்கிறேன் ['தவமாய் தவமிருந்து' படத்திலும் 'உன்னைச் சரணடைந்தேன்' பாடல் நன்றாக இருக்கும்]. பின்னணி இசை நிறைய ரீப்பீட்டு.
ஒரு திரைப்படத்தின் கதைக்களன் தான் பார்வையாளர்களை அந்த திரைப்படத்துடன் ஐக்கியப்படுத்துகிறது. கதைக்களனுக்கு ஏற்றவாறு வலுவான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படங்கள் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்று மிகச் சிறந்த திரைப்படங்களாக போற்றப்படுகின்றன. அதே நேரம் அடித்து ஆடவேண்டிய அட்டகாசமான கதைக்களனில் சொதப்பலான திரைக்கதையால் மொக்கையாகிப்போன படங்களும் உண்டு. 'அம்முவாகிய நான்' இந்த இரண்டிற்கும் நடுவில் ஊசலாடுகிறது. பாலியல் தொழிலாளியான அம்முவின் வாழ்க்கையை கதைக்களனாக எடுத்த இயக்குனர் பத்மாமகன் அந்த வலுவான களனுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைக்கவில்லையோ என்ற எண்ணம் படம் பார்த்ததும் தோன்றுகிறது. ஆனாலும் 'அம்முவாகிய நான்' சராசரி மசாலா படங்களுக்கிடையே கண்டிப்பாக ஒரு படி மேலே தான்.
Thursday, August 30, 2007
தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம்
தங்கர்பச்சான் இயக்கி நடிகர்கள் நரேன், சினேகா, இயக்குனர் சீமான், எஸ்.எஸ்.மியூசிக் புகழ் ஸ்ரேயா மற்றும் தங்கர்பச்சானும் நடித்து வெளிவந்திருக்கும் படம் பள்ளிக்கூடம். படத்தின் இசை பரத்வாஜ்.
ஒரு கிராமத்தின் கல்வித் தாகத்தை தீர்த்து வைக்கும் கேணியாக பல ஆண்டுகளாய் எழுந்து நின்ற பள்ளிக்கூடமொன்று பல்வேறு சிக்கல்களால் மூச்சு திணறி மூடு விழா காண இருக்கிறது. அந்த மூடு விழாவை தடுத்து நிறுத்தி பள்ளிக்கூடத்தைக் காக்க பழைய மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சியே பள்ளிக்கூடத்தின் ஒற்றை வரி கதை.
அழகியின் கதைக் களம் மீது தங்கர் கொண்ட காதல் இன்னும் குறையவில்லை போலிருக்கிறது.. அதே மண் சார்ந்தே பள்ளிக்கூடமும் படமாக்கப்பட்டுள்ளது.
பழைய மாணவர்களாய் சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இயக்குனர் சீமான், தங்கர்பச்சான் மற்றும் சினேகா. கச்சிதமான தேர்வு. பொருந்துகிறார்கள்.
நரேன் காதலனாய் வரும் காட்சிகளை விட கலெக்டராய் நல்லாச் செய்து இருக்கிறார். பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து வாழ்க்கையில் முந்தும் கேரக்டரில் நடிக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் அதை ஓரளவே நரேன் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. சினேகாவுடனான ஆரம்ப காதல் காட்சிகளிலும் நரேனிடம் ஒரு வித இறுக்கம் அதே இறுக்கம் பிற்பாதி ஊடல் காட்சிகளிலும் நீடிக்கிறது.
சீமான் இயக்குனராகவே வந்துப் போகிறார். சீமானுக்கு இது முதல் நடிப்பு அனுபவம் என்பது தெரிகிறது...
சினேகா மேக்கப் இல்லாமல் கிராமத்துப் பெண்ணாக வருகிறார்.இயல்பான நடிப்பால் பாத்திரத்தை நிறுத்துகிறார். பள்ளிக்காகத் தன் சொந்தங்களிடமே போராடும் காட்சிகளில் யதார்த்தமாய் செய்து இருக்கிறார். கோகிலா டீச்சராய் ஒரு நல்ல நிறைவான பாத்திரமேற்று அதை நல்லப் படியாய் செய்திருக்கிறார்.
யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் முந்துகிறார் தங்கர். கிராமத்து வெகுளி விவசாயியாகவே தங்கர் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.. பள்ளிக்கூடத்தைப் பொறுத்த வரை நடிகராய் தங்கர் இயக்குனர் தங்கரை பல மைல்கள் தாண்டி நிற்கிறார்.
நரேனைப் பார்க்க கலெக்டர் ஆபிஸ்க்கு பலகாரங்களைப் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி, சீமான் வீட்டில் பழையச் சட்டைகளைப் போட்டு அழகு பார்க்கும் காட்சி, தன் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தலையில் வைத்து பெஞ்ச் சுமந்து வரும் காட்சி, நண்பர்களுக்குப் போர்த்தப்படும் பொன்னாடைக்குள் தானும் நுழைந்துக் கொண்டு அவர்களோடு தலைமையாசிரியர் காலில் விழும் காட்சி என தங்கர் நடிப்பில் நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம்.
நடிப்பையே அதிகம் யோசித்ததாலோ என்னவோ தங்கர் திரைக்கதையில் கவனம் குறைத்துவிட்டாரோ என்னவோ... படத்தின் வேகம் மிகவும் குறைவு.. பல இடங்களில் நம் பள்ளி ஞாபகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பள்ளிக்கூடம் திரையில் ஓடும் பள்ளிக்கூடம் கதையின் ஓட்டத்தில் இருந்து நம்மை விலகச் செய்கிறது.
சீமான் அறிமுக பாடல் காட்சி தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
யதார்த்தமானக் கதைக் களத்தில் ஓட்டாத கதாபாத்திரப் படைப்பு டியூசன் டீச்சராக, அரசாங்க சுகாதார அலுவராக வந்துப் போகும் ஸ்ரேயா. அதுவும் கதையின் பிற்பாதியில் ஸ்ரேயாவை சீமானின் தாயாக வயதானக் கெட்டப்பில் காட்டுவதெல்லாம் ஸ்ப்ப்பா முடியல்ல ரகம்.
சினேகா - நரேன் காதல் பிரிவுக்கானக் காரணத்தில் அழுத்தம் இன்னும் கூட்டியிருக்கலாம். பிரிந்தவர்கள் சேர்வதும் கதையின் முடிவுக்கான சம்பிராதயமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது..
பள்ளிக்கூட இன் ஸ்பெக்சன் காட்சிகளும், வீடு வீதி என வாத்தியார்கள் மாணவர்களைப் பிடிக்க அலையும் பாடல் காட்சிகளும் கலகல ரகம்.
உலக ஆசிரியர்கள் அனைவருக்கும் கீத்துக் கொட்டை சார்பில் ஆசிரிய தின வாழ்த்துக்கள்
Spider Man 3
ஸ்பைடர் மேன் - 3, ஸ்பைடர் மேன் 1,2 வெற்றிகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையேயும் பெருமளவு விளம்பரங்களுடனும் வெளியாகியுள்ளது.
கதை என்னவாயிருக்கும்னு ட்ரெயிலர் பார்த்த அத்தனை பேருக்கும் புரிஞ்சிருக்கும். அதீத சக்தி படைத்த நாயகன் இருக்கும் போது அதற்கு சமமான அல்லது அதைவிட சக்தி படைத்த வில்லன்(கள்) இருப்பார்கள். அவர்களுடன் போரிட்டு தர்மத்தை(?) நிலைநாட்டுவார் நாயகன்.
இதுதான் ஸ்பைடர் மேன் - 3 கதையும் (1,2ம் பாகத்தின் கதையும் இதுதானேனு யாரும் கேக்காதீங்க). பொதுவாக தொடர்ச்சியாக வரும் படங்களில் பெரும்பாலுமானவற்றில் முதல் பகுதியே மக்களை கவரும் (டெர்மினேட்டர், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்றவை விதிவிலக்கு). அதை ஸ்பைடர் மேனும் உறுதி செய்யும் என்றே நம்புகிறேன்.
படம் ஸ்பைடர் மேன் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகமே ஆனா ஆக்ஷன் பிரியர்களை நிச்சயமாக கவரும். அதனால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஆனா எந்தவித எதிர்பார்ப்பும் வேண்டாம்
படம் கொஞ்சம் பெருசா இருந்துச்சு, முடிஞ்சி வரும் போது கொஞ்சம் லேசா தலைவலி வந்துச்சு. அதுக்கு படம் தான் காரணமானு தெரியல
சரி இனிமே கதை சொல்ல போறேன். கதை தெரிஞ்சிக்கனும்னு நினைப்பவர்கள் மட்டும் படிக்கவும்…
ஸ்பைடர் மேனால் ஓரளவு குற்றங்கள் குறைக்கப்பட்டு நியு யார்க் நகரம் ஓரளவு அமைதியாக இருக்கிறது. பீட்டர் பார்க்கர் தன்னுடைய காதலியுடன் நேரம் செலவழித்து, அவருடைய இயல்பான வாழ்க்கையையும் நடத்தி கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ஸ்பைடர் மேனுக்கும் வேலை வருகிறது. ஆனால் அது சவாலனவைகளாக இருப்பதில்லை. மக்கள் அவரை பெரிதும் மதிக்கிறார்கள்.
அந்த நேரத்தில் அவருடைய நண்பன் ஹேரி (Harry Osben) அவர் தந்தையும் மரணத்திற்காக ஸ்பைடர் மேனை பழி தீர்க்க முயல்கிறார். அங்கே நடக்கும் சண்டையில் அவர் தன்னுடைய நினைவை இழக்கிறார்.
ஃப்ளிண்ட் மார்கோ என்னும் ஜோப்படி திருடன் தவறுதலாக ஒரு ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் மாட்டி மணல் மனிதனாக மாறுகிறார். இவர்தான் பீட்டரின் மாமாவை கொன்றவர் என்பது பீட்டருக்கு தெரிய வர இவரை பழி வாங்குகிறார் ஸ்பைடர் மேன். ஆனா மணல் மனிதன் திரும்பவும் தப்பித்து வருகிறார்.
இந்த நிலையில் விண்வெளியிலிருந்து வரும் ஒரு பொருள் (web மாதிரி இருந்துச்சி) ஸ்பைடர் மேன் மேல் ஏறிக்கொள்ள ஸ்பைடர் மேனுக்கு அதிக சக்திகள் கிடைக்கிறது. அவருடைய உடையும் கருப்பு நிறத்திற்கு மாறுகிறது. அவர் மனமும் பழி வாங்கும் குணமும், தானென்ற அகங்காரமும் வருகிறது.
இந்த நிலையில் தான் மணல் மனிதனை அழிக்கிறார். அவர் நண்பனுக்கு நினைவு வர அவர் பீட்டர் பார்க்கரை அவர் காதலியிடமிருந்து பிரிக்க முயல அதை அறிந்து அவரையும் அழிக்கிறார். அவருடைய போக்கில் பெரும் மாறுதல் தெரிகிறது. அவர் காதலியையும் கஷ்டப்படுத்துகிறார். பிறகு அவர் அத்தை அவருடைய போக்கில் தெரியும் வித்தியாசத்தில் அவரை எச்சரிக்க, அவர் அந்த கருப்பு நிறவாசியை அவரிடமிருந்து ஒரு வழியாக விளக்குகிறார். அந்த திமிர் பிடித்த ஸ்பைடர் மேன் சூப்பர்
அந்த நேரத்தில் பீட்டர் பார்க்கரால் அவமானப்பட்டு, வேலையிழந்த எட்டிக்கு அந்த சக்தி கிடைக்கிறது.
இறுதியாக மணல் மனிதன், கருப்பு ஸ்பைடர் மேன் சேர்ந்து பீட்டர் பார்க்கரை அழிக்க நினைக்கிறார்கள். வழக்கம் போல அவருடைய காதலியை கடத்தி கொண்டு போய் தொங்கவிடுகிறார்கள். ஸ்பைடர் மேன் அவர்களுடன் போராட அவர் நண்பர் ஹேரியை நாடுகிறார். (அவர் எப்படி சாகாமல் தப்பித்தார் என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.) அவர் உதவ மறுக்கிறார். ஆனால் சரியான நேரத்தில் வந்து நண்பனுக்கு உதவி செய்து உயிரை இழக்கிறார்.
கருப்பு ஸ்பைடர் மேன் இறக்க, மணல் மனிதன் திருந்த, அவரை மன்னித்து அனுப்புகிறார் பீட்டர். ஒரு வழியா படம் முடிஞ்சிது…
அடுத்த பகுதி வந்தா, இன்னும் கொஞ்சம் லேட்டா வரட்டும்
bommerillu
அதில் குறிப்பிடத்தக்கவை "ஆ நலுகுறு" , "அனுகோக்குண்ட ஒக ரோஜு" மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் "பொம்மரில்லு".
"பொம்மரில்லு" என்றால் "பொம்மை வீடு" என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.
முதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் மையக்கரு.
கண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.
அப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.
இதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.
இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.
யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.
இது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.
பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.
Wednesday, August 22, 2007
பராசக்தி
"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. பல இடங்களில் நம்மை எழுந்து நிற்க வைக்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து நிற்கிறாள்.
சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது. "இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது எவ்வளவு உண்மை. இவனுங்கள எல்லாம் இட்லி சுட்டு படிக்க வெச்சனே, இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்தக்கூட யோசிக்கறானுங்களேனு வயசான பாட்டிங்க அவுங்க பசங்களை திட்டி கேள்விப்பட்டுருக்கேன்.
படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான், ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.
போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.
அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள். அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.
கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அந்த கேடு கெட்டவனுக்கு பாரதிதாசனின் புத்தகங்கள் ஒரு முகத்திரை. அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.
பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.
பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். சுபம்...
இனி படத்தில் மனதை தொட்ட காட்சிகள்...
- குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?
- பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை வேண்டுமென்று போராட்டம் நடுத்த போவதாக சொல்கிறார் ஞானசேகரன். அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்
- ஓ ரசிக்கும் சீமானே பாடலும், புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
- காசை பற்றி வரும் பாடலில் இந்த வரிகள் அருமையிலும் அருமை... இதை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடுடா தாண்டவக்கோனே
முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
சில முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பிணத்தை கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பணம் பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே
- போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை
"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"
"ஏய்"
"உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்"
"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"
இதே வசனத்தை இன்றும் படத்தில் வைக்கலாம். நல்ல கைத்தட்டல் கிடைக்கும். பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.
- படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள். ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார். அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன். முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.
- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை. முற்பிறவியில் செய்த கருமவிணைகளால் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பின் தேவியின் சந்திக்கு கல்யாணி சென்ற பிறகு நடக்கும் பல மாற்றங்களால் அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். கல்யாணியின் குழந்தை இறக்காததும் அவள் அருளே. இந்த கஷ்டங்களை அவர்கள் அனுபவிப்பதாலே ஏழைகளுக்கு உதவ வேண்டும், சமத்துவம் மலர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக முயல்கிறார்கள். இதை பண்டரிபாய் நடிகர் திலகத்திற்கு சொல்லும் இடம் அருமை.
- இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது. என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்?
- இன்று இதே படத்தை சூர்யாவையோ, விக்ரமையோ போட்டு எடுக்கலாம். இட்லிக்கடைக்கு பதில் கட்டட வேலைக்கு செல்வதாக காட்டலாம். வேறு எந்த மாற்றமும் தேவையில்லை.