Sunday, November 18, 2007

One Flew Over the Cuckoo's Nest

ஒரு திரைப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் பார்ப்பவரிடத்தில் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு நிலைக்குமேயானால் அது மிகச் சிறந்த திரைப்படமாகப் போற்றப்படும். நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் அத்தகைய திரைப்படங்களின் பட்டியல் மிகப் பெரியது. அவ்வாறான ஒரு திரைப்படம் தான் One Flew Over the Cuckoo's Nest.

ராண்டல் மெக்மர்ஃபி என்னும் குற்றவாளி சிறைச்சாலை வேலைகளிலிருந்து தப்பிப்பதற்காக பொய்யாக மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான். அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். சிலர் தாமாகவே அங்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேட்சட் என்னும் நர்ஸ் அந்த காப்பகத்தின் நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிருக்கும் கண்டிப்பான நர்ஸாக இருக்கிறார். ஒவ்வொரு நோயாளியையும் அவர்கள் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று சித்தாந்தம் பேசும் மெக்மர்ஃபி ரேட்சட்டின் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். ரேட்சட் அவர்களை யோசிக்கவே விடாமல் மனநோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் மெக்மர்ஃபி. ரேட்சட்டுடன் சண்டை போடுவதும், சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதும் மற்ற நோயாளிகளை அவன்பால் ஈர்க்கின்றன. அவனிடம் நட்பு கொள்கின்றனர். வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமைசெவிடனாக நடிக்கும் சீஃப் என்ற நோயாளி மெக்மர்ஃபியுடன் நெருங்கிப் பழகுகிறான்.



அத்தனை நாட்களாக ரேட்சட்டின் கட்டுப்பாட்டில் நோயாளிகள் போல் வாழ்ந்த அவர்கள் பயத்தைக் குறைக்கின்றான். இதனால் ரேட்சட்டுக்கும் மெக்மர்ஃபிக்கும் சண்டை வலுக்கிறது. ரேட்சட் இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் மெக்மர்ஃபி தப்பி ஓட முடிவெடுக்கிறான். தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். அடுத்த நாள் அத்தனை பேரும் ரேட்சட்டிடம் சிக்கிவிடுகின்றனர். அப்போது ரேட்சட்டிற்கும் மெக்மர்ஃபிக்கும் இடையில் தக்ராறு ஏற்பட்டு மெக்மர்ஃபி ரேட்சட்டைத் தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு Lobotomy செய்யப்படுகிறது. மூளையின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் சீஃப் ஒரு விடியலில் மெக்மர்ஃபியைக் கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.

திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சுதந்திரமாக சந்தோஷமாகக் கழிக்கும் மெக்மர்ஃபி, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் ரேட்சட், மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.



மெக்மர்ஃபியாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). தலைவரின் நடிப்பைப் பற்றி ஒன்றுமே சொல்ல வேண்டாம். ஆஸ்கர் விருது வாங்கித் தந்த கதாபாத்திரம். அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள்.

நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். மெக்மர்ஃபி மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் சீஃப் அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சி என படம் நெடுக நம்மை ஒன்றச் செய்யும்.

மெக்மர்ஃபி காப்பகத்திலுள்ள மனநோயாளிகளிடமும் படம் பார்க்கும் நம்மிலும் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது. One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

Tuesday, November 6, 2007

பாசத்தமிழனாக சூர்யாவின் வேல்



ஹலோ சூர்யா தள்ளி நில்லுங்க இது உங்க படம் இல்ல புரியுதா?

சரி இனிமே விமர்சனத்துக்குப் போலாம் ரைட்டா

தீவாளிக்கு என்னப் படம் போலாம்ன்னு யோசிச்சு கொஞ்சம் முன் ஜாக்கிரதையா முடிவெடுத்துப் போனப் படம் நம்ம சூர்யா & சூர்யா நடிச்ச வேல் படம் ... ரெண்டு சூர்யாங்க.. ரெண்டும் நம்ம ஜோவின் சூர்யா தான்.. எஸ்.ஜே.சூர்யாவோடு போட்டு குழப்பிக்காதீங்க...

படத்தோட இயக்குனர் ஹரின்னு தெரிஞ்சதும் கதையும் தெரிஞ்சுப் போச்சு... போஸ்ட்டர் மற்றும் ட்ரெயிலர்களில் படத்தை தீபாவளிக்கு முன்னாடியே பலத் தடவைப் பார்த்து பழகிய பின்னும் தியேட்டருக்கு வேற போயிட்டோம் இல்ல.







ஒரு காலத்துல்ல வில்லனா அசத்துன சரண்ராஜ் இந்தப் படத்துல்ல அடக்க ஒடுக்கமான அப்பா...என்னக் கொடுமை சார் இது.. அவருக்கு மனைவியாக சூர்யாஸ் அம்மாவாக தவமாய் தவமிருந்து புகழ் அம்மா சரண்யா

ட்ரெயின்ல்ல நகையைத் தொலைப்பாங்க... பணத்தைத் தொலைப்பாங்க.. நம்ம வேல் படத்துல்ல சரண்ராஜூம் அவர் மனைவியும் குழந்தையைத் தொலைக்கிறாங்க.. ஆதி காலத்து ஜெய்சங்கர் படங்கள் ஞாபகம் வரும் விதமாக..

ஒரு சூர்யா சிட்டி கையாவும்... இன்னொரு சூர்யா கிராமத்தில் பெரிய கை யாகவும் வளர்ந்து வாழுகிறார்கள்.

சிட்டி கை சூர்யா..ஒரு துப்பு துலுக்கும் அலுவலகத்தில் முக்கிய புள்ளியாக டூட்டி பார்க்கிறார்..அதே சமயத்தில் ஸ்கூட்டியில் வரும் பியூட்டி அசினோடு டுயட் பாடுகிறார்..

சொக்கம் பட்டி கை சூர்யா.. காக்க காக்க ஜீப் மாடலில் ஒரு ஜீப்பில் ஏறி ஐசக் நியூட்டன் அரும்பாடு பட்டு கண்டுபிடித்த அனைத்து இயற்பியல் விதிகளை அநியாயத்துக்கு நக்கல் அடிக்கிறார்.. நோ வாக்கிங்... கிராமத்து அறிமுகமே பிளையிங் தான்....ஹரி படங்களின் முக்கிய கதாபாத்திரமான அருவாள் இதில் கிராமத்து சூர்யா மற்றும் அவர் அடியாட்கள், சூர்யாவை எதிர்க்கும் வில்லன் கோஷ்ட்டியோட படம் முழுக்க மற்றும் ஒரு முக்கிய ரோலில் கிழி கிழி எனக் கிழிக்கிறது.

கிராமத்துச் சூர்யாவுக்கும் அவரைத் தத்து எடுத்த குடும்பத்துக்கும் நிரந்தர தலைவலி தரும் வில்லனாக கலாபவன் மணி.. அவருடைய் வழக்கமான சேட்டைகள் கொஞ்சம் கம்மி தான் இந்தப் படத்தில்.

இந்தப் பிரச்சனை ஒரு புறம் என்றால்.. குழந்தையைத் தொலைத்த அம்மாவின் பாசம் என இன்னொரு பக்கம் கதையை நகர்த்துகிறார் ஹரி... கதையின் இடைவேளையில்... சாரி படத்தின் இடைவேளையில் இரண்டு சூர்யாக்களும் நேருக்கு நேர் சந்திக்க பாசப் போராட்டமாய் படம் ட்ராக் மாறுகிறது..

இரட்டை வேடக் கதைகளுக்கே உரித்தான ஆள் மாறாட்டம்..அதன் மூலம் ஒருவர் பிரச்சனையை ஒருவர் தீர்ப்பது என அமைக்கப்பட்ட இலக்கணத்தை கடைப்பிடித்து படம் போகிறது. இறுதியில் நன்மை வெல்கிறது தீமை சாய்கிறது சுபம்.. இது தான் வேல்

சூர்யாவுக்கு இரட்டை வேடம்.. அதிகம் வித்தியாசம் எல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லாத இரட்டை வேடம். காக்க காக்க ஜிப்பில் ஏறி போனத் தடவை துப்பாக்கி தூக்கிய சூர்யா இந்த முறை அதே ஜீப்பில் ஏறி அருவாள் தூக்குகிறார். மொறைப்பும் விறைப்புமாகத் திரிகிறார். அசினை அளவோடு காதலிக்கிறார்.பாசக்காரப் பயலாக பெத்த அம்மா அப்பா, வளர்ப்பு குடும்பம் என மொத்தப் பேரிடம் பொங்குகிறார். மத்தப் படி சொல்லிக்கிற மாதிரி பெரிய வேலை எல்லாம் அவருக்கு இல்லை.

அசினுக்கும் பெரிய வேலை. சூர்யாவைக் காதலிக்கணும். ஆடணும் பாடணும். போஸ்டருக்குப் போஸ் கொடுக்கணும். அதை செய்துவிட்டு போகிறார்.

பாசமழையைக் கண்டப் படி பொழியும் கதாபாத்திரங்களில் சரண்யா, சரண்ராஜ், லட்சுமி,ராஜ்கபூர் மற்றும் பலர். வில்லன் கலாபவன் மணிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா. சார்லி மற்றும் வையாபுரிக்கு சின்ன வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

படத்தில் முக்கியமான வேடத்தில் வடிவேலு...வழக்கமான பாணி காமெடி என்றாலும் சிரிக்க வைக்கிறார். அறிமுக காட்சியில் இருந்து அவர் அலம்பல் ஆரம்பம் ஆகிறது.

பாடல்கள் யுவன் ஷங்கராம்..நம்ப முடியவில்லை...பாடல்கள் ஹரியும் எழுதியிருக்கிறாராம்....கேட்டாலே சும்மா அருவாள் எடுத்து முதுகைத் தேய்க்கணும் போலிருக்கு..

படத்துக்கு நடன அமைப்பாளர் கிடைக்கல்லயா இல்ல ஷீட்டீங் அன்னிக்கு லீவ்ல்ல போயிட்டாரான்னு தெரியல்ல.. அதுவும் அந்த வெளிநாட்டு பாடல் காட்சியில் ஆட்டமே ஆடுகிறதுன்னாப் பாருங்க..

மொத்தத்தில் வேல் ஒரு கீத்துக்கொட்டா முன் வரிசை ரசிகன் என்ன எதிர்ப்பார்ப்பானோ அதை கொடுக்க முயற்சி பண்ணி இருக்கார் ஹரி.

பிகு: இந்த படத்தில் முதல் முறையாக சூர்யாவும் பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி பல்ஸ் எகிற வைத்திருக்கிறார்.

Friday, October 26, 2007

Eternal Sunshine of the Spotless Mind

நீரைப் போல்
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......

பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...

வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....

அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..

என்ன செய்ய?
அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!

-காயத்ரி

வாழ்க்கையையும் அடித்து எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?

ஜோயலும் க்ளெமென்டைனும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் க்ளெமென்டைன் ஜோயலுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள். லகுனா(Lacuna Inc.) என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்து அவ்ர்கள் மூலமாக ஜோயல் குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.

இதை நண்பர்கள் மூலம் அறியும் ஜோயல் தானும் அதே நிறுவனத்தின் மூலமாக க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் க்ளெம்ன்டைனுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் க்ளெம்ன்டைனை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான். அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் ஜோயலும் மீண்டும் இணைவார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க. இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.

படத்தில் ஜோயல்-க்ளெமென்டைன் காதலைத் தவிர லகுனா நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை. அதேபோல் க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழித்த பேட்ரிக் அவள்பால் ஈர்க்கப்பட்டு க்ளெமென்டைன் லகுனா நிறுவனத்திடம் ஒப்படைத்த ஜோயலின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.

கதாநாயகன் ஜோயல் ஆக ஜிம் கேரி(Jim Carrey) நடித்திருக்கிறார். ஜிம் கேரியின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட ஜோயல் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும்போதும் ஆழ்மனதின் மூலமாக க்ளெமென்டைனின் நினைவுகளை அசைபோடும்போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கேட் வின்ஸ்லெட்(Kate Winslet) க்ளெம்ன்டைனாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. க்ளெம்ன்டைன் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நட்க்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.

ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத அமரும்பொழுது இந்த படம் குறித்த நினைவுகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா...

Tuesday, October 9, 2007

கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ.

இரண்டாயிரம் வருடம் பழமையான தமிழ் மொழி படித்த எனக்கு இரண்டாயிரம் சம்பளம்.. இருபத்து அஞ்சு வருடத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படித்த உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?

கற்றது தமிழ் இயக்குனர் ராமின் கேள்வி இது? கேள்வியில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா..இயலாமையா...பொறாமையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கெ விட்டு விடுகிறேன்..

ஜீவா..தமிழ் திரையுலகின் புதிய தலைமுறை நடிகர்களில் கொஞ்சம் பரீச்சதார்த்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்..அவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கற்றது தமிழ்..

பிரபாகர் என்ற தமிழ் படித்த முதுகலைப் பட்டதாரியின் துயரம் நிறைந்த வாழ்க்கையை திரையில் இயக்குனர் யதார்த்தமாய் சொல்ல முயன்றுள்ளார்.

அகால மரணங்களின் ஒரு மொத்தத் தொகுப்பாய் பிரபாகரின் சிறுவயது கழிகிறது...அதனால் மனம் பாதிக்கப்படும் பிரபாகரின் பாலைவன வாழ்க்கையில் பூக்கும் ஒரே வசந்தம் அவன் சிறு வயது தோழி ஆனந்தி.. ஆனந்தியின் வாழ்க்கையிலும் ஆனந்தமில்லை.. அவ்வப்போது வந்துப் போகும் சந்தோசச் சாரல் பிரபாகர் மட்டுமே..

பிரபாகர் தமிழ் படிக்கிறான்... தமிழின் மீதான பாசமா..பற்றா... அழுத்தமானக் காரணம் இல்லை.. அவனை ஆளாக்கும் தமிழய்யாவின் மீது கொண்ட பற்று எனக் கொள்ளலாம்..

தமிழ் படித்தும் பிரபாகரின் துயரங்கள் தீராது நீள்கிறது..இதனால் பிரபாகரின் மனபிறழ்வு அதிகரிக்கிறது..

அவ்வபோது பிரபாகரின் வாழ்க்கையில் வந்துப் போகும் ஆனந்தியைத் தன் வசப்படுத்த பிரபாகர் தனக்குள்ளே போராடுகிறான்.. எல்லாப் போராட்டங்களும் தோல்வி என்னும் ஒரே புள்ளியில் கொண்டு போய் குவிக்க...ஒரு கட்டத்தில் போலீஸிடம் சிக்கி தெருவில் அடிபடுகிறான்.. சிறைக்குச் செல்கிறான்...தற்கொலைக்கு முயல்கிறான்.. தன் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைத் தேடி தனக்குள் குமுறுகிறான்..சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்யும் பிரபாகர்.. தொடர்ந்து கொலைகள் செய்வதில் ஆனந்தம் கொள்கிறான்....

ஜீவா.. புதிய தலைமுறை தமிழ் நடிகர்களில் பரிச்சார்த்தமான முயற்சிகளில் உற்சாகமாய் ஈடுபடும் ஒரு நடிகர்.. படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். அதன் பலன் நன்றாகவே திரையில் தெரிகிறது..அவரது முந்தைய படங்களில் ஒன்றான ராமில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் சாயல் கொண்ட பாத்திரமே இந்தப் படத்திலும்.. ஆனால் நன்றாகவே மாறுபடுத்திக் காட்டுகிறார்..

இப்படி மனக்குழப்பங்களின் உச்சத்தில் வாழ்க்கையை நகர்த்தும் இளைஞன் பிரபாகரின் மொத்தக் கோபமும் ஐடி பிபிஓ மக்கள் மீது திரும்புகிறது.. இப்போது பதிவின் முதல் வரியைத் திரும்பப் படிங்க...

ஆனந்தியாக புதுமுகம் அஞ்சலி.. குழந்தைத் தனமான அழகு...அவ்வபோது வந்து போகிறார்..நல்லதொரு தேர்வு.. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஜீவாவிடம் அவர் நிஜமாலும் தான் சொல்லுறீயா.. எனக் கேடபது... ம்ம்ம்ம் என ஜீவா தலையாட்டுவது ரசனைக்குரிய காட்சிகள்.

தமிழ் வாத்தியாராக வரும் அழகம்பெருமாள் நெல்லைச் சீமைத் தமிழை வெளுத்து வாங்குகிறார். நல்ல தேர்வு.

காமெடிக்கு கருணாஸ்...ஜீவாவின் சொந்தக் கதையைக் கேட்டு வீடியோவில் பதிய ஜீவாவால் கடத்திவரப் பட்ட வீடியோகிராபராய் வருகிறார்..கருணாஸின் டைமிங் கமெண்ட்கள் புன்னகைக்க வைக்கின்றன.. அதிலும் ஜீவா அவரிடம் எதாவது புரியுதான்னு அடிக்கடி கேட்க அதற்கு கருணாஸ் கொடுக்கும் பதில்கள் கிட்டத்தட்ட தியேட்டரில் இருக்கும் ஆடியன்சின் ரெஸ்பான்சை ஒத்துப் போகிறது..

யுவனின் பாடல்களில் குறிப்பாக இளையராஜா பாடும் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை ஓ.கே..

கேமரா பாராட்ட வேண்டிய விசயம்.. படம் பல இடங்களுக்கு பயணிக்க கண்களுக்கு இதமாக அந்த பயணம் அமையும் படி கேமராப் பார்த்துக் கொண்டிருக்கிறது... அசத்தல்.

இயக்குனர் ராம் அவர்களுக்கு... கற்றது தமிழ் மூலம் நீங்கள் சொல்ல வந்தது என்ன? பிரபாகரின் சொந்தச் சோகங்களையா? பிரபாகர் - ஆனந்தியின் காதலையா? இல்லை ஐடி...பிபிஓ மக்கள் மீது உங்களுக்கு எழுந்துள்ள அடிப்படையற்ற கோபத்தையா? புரியவில்லை...

ஐடி, பிபிஓ மக்களைக் குறிவைத்து வைக்கப்பட்டிருக்கும் நையாண்டி காட்சிகளுக்கு மற்ற துறை மக்களின் கைத்தட்டல்கள் ஒரு வேளை கிடைக்கலாம்...

மொத்தத்தில் கற்றது தமிழ் - சிலபஸில் குழப்பம்

படம் முடிஞ்சு வெளியே வரும் போது காதில் விழுந்தது... ராப்பகலா ஒரு வாரம் பொட்டியத் தட்டிகிட்டு உக்காந்து இருந்துட்டு வீக் என்ட்ல்ல ரிலாக்ஸா படம் போலாம்ன்னு வந்தா... மாப்பி இவன் போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டான்டா...

Tuesday, October 2, 2007

12 Angry Men

ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 வயது இளைஞன். 12 ஜூரிகள். பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை. இதை வைத்து மிகச் சிறப்பாக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் 12 Angry Men.

ஒரு ஸ்பானிய இளைஞன் தன் தந்தையைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறான். சாட்சிகளும் ஆதாரங்களும் அவனுக்கெதிராக இருக்கின்றன. அவன் தொலைத்ததாக சொல்லும் கத்தி கொலை நடந்த இடத்தில் கிடைக்கிறது. ஆனால் அவனோ குற்றத்தை மறுக்கிறான். வழக்கு முடிந்ததும் நீதிபதி 12 நடுவர்களை வழக்கு குறித்து முடிவெடுக்கச் சொல்கிறார். குற்றவாளியென நடுவர்கள் முடிவு செய்தால் அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி. நடுவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

சாட்சிகள் அந்த இளைஞனுக்கு எதிராக இருப்பதால் பதினோரு நடுவர்களுமே அவன் குற்றவாளி என ஏகமனதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமிருப்பதாகவும் அவன் நிரபராதியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார். வழக்கு விசாரனையில் தனக்கு திருப்தியில்லை எனவும் அந்த இளைஞன் தவறுதலாக தண்டிக்கப்படக் கூடாதென்றும் கூறுகிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நடுவர்கள் வழக்கு குறித்து் தீர ஆராய வேண்டுமென்கிறார்.



மற்ற நடுவர்கள் விவாதிப்பது நேர விரயம் எனக் கூறி மறுக்கின்றனர். அந்த இளைஞன் கொலை செய்தது குறித்து தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர். அவரோ அந்த இளைஞன் சார்பான வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி அவற்றை முன் வைக்கிறார். விவாதத்தினிடையே நடுவர்களிடையே வாக்குவாதங்களும் சிறு மோதல்களும் நிகழ்கின்றன. வழக்கு குறித்து பேசப் பேச ஒவ்வொரு நடுவர்களாக மனதை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவன் குற்றவாளியென நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென அந்த இளைஞனை விடுதலை செய்ய முடிவெடுக்கின்றனர்.

இந்த எளிமையான கதையின் பலமே நடுவர்களாக வரும் 12 கதாபாத்திரங்கள்தான். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 12 கதாபாத்திரங்களும் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் பின்புலமும் இந்த வழக்கு குறித்த அவர்களது பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதை மிகச் சிறப்பாக படம்பிடித்திருப்பார்கள். வெற்றிகரமான தொழிலதிபர் முதல் வாழ்வில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஏழை வரை, இனவெறியாளன் முதல் மிகவும் கனிவான கதாபாத்திரம் வரை என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். வழக்கு குறித்த விவாதத்தினிடையே நடுவர்களுக்குள் தனிப்பட்ட மோதல்களும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடுவர்கள் குழுக்களாக சார்புநிலை எடுப்பதும் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.

அதே போல் கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே வசனங்கள் அமைந்திருக்கும். அந்த இளைஞனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்களில் நம்மையே ஒரு சார்பை எடுக்க வைக்கும் அளவுக்கு வசனங்களும் காட்சியமைப்புகளும் கூர்மையாக இருக்கும். நடுவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.

1957-இல் வந்த இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் திரையிடப்படுகின்றது. இரண்டு மணி நேரம் ஒரே அறையில் 12 பேர் பேசிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியுமென்றால் இந்த படம் கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒன்று.

Sunday, September 23, 2007

மருதமலை

கொஞ்சம் பாட்சா கொஞ்சம் முதல்வன் கொஞ்சம் கிரீடம் இன்னும் இப்படி நிறைய படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து எடுத்து சேர்த்து கோர்த்து தோரணமாய் தொங்கவிடப்பட்டிருக்கும் படம் தான் மருதமலை.. கம கம கமர்ஷியல் மசாலா.



தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்,
இயக்கம் தலைநகரம் படப் புகழ் சுராஜ்,
இசை இமான்,
நடிப்பு அர்ஜூன், வடிவேலு, நாசர்,ரகுவரன், லால், நிலா, மற்றும் பலர்.

கமர்ஷியல் சினிமாவுக்கென்று ஷோலே வகுத்துக் கொடுத்த இலக்கணத்தின் படி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

நாச்சியார்புரம் என்றொரு கற்பனையூர், அங்கு 16 ஆண்டுகளாக தேர்தல் நடப்பதில்லை, காரணம் சாதிப் பிரச்சினை. பெரும்பான்மை உயர்சாதியைச் சேர்ந்த மாசி(மலையாள நடிகர் லால்) என்ற தனிமனிதன் சட்டத்தைத் தன் கட்டுக்குள் வைத்து அட்டுழியம் செய்கிறான். இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ரகுவரன் எப்படியும் நாச்சியார்புரத்தில் தேர்தல் நடத்துவதாய் சவால் விட்டு களம் இறங்குகிறார். வெட்டு குத்து என ரத்தவெள்ளத்தில் படம் நகர்கிறது.

இதில் கதாநாயகனுக்கு என்ன வேலை எங்கே வருகிறான்னு கேக்குறீங்களா? சொல்லுறேன்..
நம்ம நாசருக்கு ஒரு பையன் அர்ஜூன், அப்பா ஆசைப் படி சட்டம் படித்து வக்கீல் ஆகாமல் கான்ஸ்டபிள் ஆகிறார். அவருக்கு போஸ்டீங் நாச்சியார்புரத்தில் தான் போடுறாங்க. அப்புறம் என்ன வழக்கம் போல் அமைதியாகப் போகும் நாயகன் வாழ்க்கையில் புயலாய் வில்லன் நுழைய போராட்டத்தில் அப்பாவி அப்பா பலியாக... டாமல் டூமில் ட்ஷ்யூம் என படம் பறக்கிறது.

இதுல்ல கதாநாயகி எங்கே இருந்து வர்றா அப்படின்னு யோசிக்கிறீங்களா?
அதெல்லாம் தப்பு..
படத்துக்கு மியூசிக்க்குன்னு ஒருத்தரை புக் பண்ணி பாட்டுக்குன்னு கவிஞர் எல்லாம் ரெடி பண்ணி பாட்டெல்லாம் போட்டப் பொறவு.. நம்ம அர்ஜூன் கூட ஆட யாராவது வேணாமா? அதுக்குத் தான் நிலா இருக்காங்க.. வர்றாங்க... ஒட்டுறாங்க.. ஆடுறாங்க.. பாடுறாங்க... போறாங்க.. இன்னொரு புதுமுகம் வேற ஒரு பாட்டுக்கு வந்து ஆடிட்டு போறாங்க..இது தவிர முகைமது கான் குத்தாட்டம் வேற இருக்குதுங்கோ

இப்படி எல்லாமே வழக்கமா இருக்கப் படத்துல்ல என்னத் தான் ஈர்ப்பு இருக்குன்னு கேக்குறீங்களா..
நம்ம வைகைப் புயல் காமெடிங்க...

அர்ஜூனுக்கு மேலதிகாரியா அதாவது இவர் ஏட்டு அவர் காவலர். வந்து வடிவேலு பண்ற அலம்பல் இருக்கே நல்லாச் சிரிக்கலாம்.. பிற்பாதியிலே அர்ஜூன் இன்ஸ்பெக்டராகி இவருக்கு மேலதிகாரியா வரும் போது அவர் பம்மல் இன்னும் காமெடி.. மருதமலையின் ஹய்லைட் காமெடி தான்.. நல்லாவே இருக்கு.

இசை ஒரே குத்து மயம்..கதை திரைக்கதை எல்லாம் அரைச்ச மாவு தான்...

அர்ஜூன் இன்னும் தன் தோற்றத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணுவது சபாஷ், சண்டைக் காட்சிகளில் தான் இன்னும் ஆக்ஷன் கிங் தான்னு நிருபீக்கிறார். காமெடியிலும் வடிவேலுவோடு கலந்து கட்டுகிறார்.

ரகுவரன், நாசர் , ராஜேஷ் சொல்ல ஒன்றும் புதிதாக இல்லை. அனுபவ நடிப்பால் பாத்திரங்களை நிறைக்கிறார்கள்.

மலையாள நடிகர் லால் வில்லத்தனத்தில் கம்பீரம் காட்டுகிறார். சண்முகராஜன், மெட்டி ஒலி போஸ் வழக்கமான் வில்லன் மேளாவில் பங்குபெறுகிறார்கள்.

கீத்துக்கொட்டாய் தீர்ப்பு ...மருதமலை.. டைம் பாஸ்.. பொழுது போகும்... நல்லா சிரிச்சுட்டு வரலாம்...

Wednesday, September 12, 2007

அம்முவாகிய நான்

இயக்குனர் பத்மாமகன் பாணியில் சொன்னால் அம்மு என்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை திரைப்படமாக மொழிமாற்றும் முயற்சிதான் 'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் ஒன்லைன்.

வழக்கமான மசாலா திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு சொல்லப்படாத கதைகளை படமாக்கும் போது அது இயல்பானதாக இருக்க வேண்டுமேயன்றி வித்தியாசமாக படம் எடுக்கிறோம் பேர்வழி என்று கதைக்களத்தில் இருந்து பிறழ்ந்தால் பார்வையாளனுக்கும் திரையில் ஓடும் காட்சிகளுக்குமான தொலைவு அதிகரித்துவிடுகிறது. பல நல்ல கதைகள் இது போன்ற 'வித்தியாசமாக எடுக்கிறேன்' ஆர்வக்கோளாறின் காரணமாகவே மோசமான திரைப்ப்டங்களாக உருவாகியுள்ளன. அந்த வகையில், படத்தில் பார்த்திபன் இருந்தாலும், 'அம்முவாகிய நான்' படத்தில் வித்தியாசங்களை வலியத் திணிக்காமல் இயல்பான ஒரு திரைப்ப்டத்தைத் தந்திருக்கும் இயக்குனர் பத்மாமகன் பாராடடப்பட வேண்டியவர்.

அம்மு குழந்தையாக இருக்கும்போதே பாலியல் தொழிலாளியான இராணியிடம் விற்கப்படுகிறாள். ராணி மடத்தில் பாலியல் தொழிலாளிகளிடையே வளரும் அம்மு தானும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை தன் நாவல்களின் மூலம் பதிவு செய்யும் எழுத்தாளர் கெளரி சங்கர் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை நாவலாக வடிக்கும் முயற்சியாக ராணி மடத்திற்கு வருகிறார். அங்கு அம்முவின்பால் ஈர்க்கப்படுகிறார். அம்முவை மணக்க விரும்புகிறார். முதலில் மறுக்கும் அம்மு பின்னர் தன் தோழிகளின் அறிவுரையின் பேரிலும் கெளரிசங்கரின் அன்பாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணம் முடிந்ததுமான அவர்களது வாழ்க்கை அழகான கவிதை.



கெளரிசங்கரை வளர்த்த அக்காவாலும் அம்முவுக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாலும் சிறுசிறு பிரச்சனைகள் வருகின்றன.கெளரிசங்கர் தன் லட்சிய நாவலை முடித்து விருது தேர்வுக்கு அனுப்புகிறார். முன்பொரு முறை அம்முவினால் அவமானப்படுத்தப்பட்ட எழுத்தாளர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார். அதனால் கெளரிசங்கருக்கு விருது கிடைப்பதில் இடையூறு. இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித் திரையில் காண்க.

படத்தின் பெரும்பலம் கச்சிதமான காட்சியமைப்பு. வில்லன் வரும் காட்சிகளைத் தவிர மற்ற எதுவுமே சலிப்பூட்டவில்லை. நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் கூர்மையான வசனங்களும் பெரும்பலம். பல இடங்களில் புனசிரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிக்க வைக்கிறது. 'ராணி மடம்' என்ற பாலியல் தொழிலாளர்களின் வீட்டைக் காட்டும்போது வழக்கமான தமிழ் சினிமா போல் விரசக் காட்சிகளோடும் அவர்களை கழிவிரக்கம் மிக்கவர்களாகவும் காட்டாததற்கு பத்மாமகனிற்கு ஒரு பெரிய ஓ!!

ஆனாலும் கதாபாத்திரங்கள் உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக முக்கிய கதாபாத்திரமான அம்முவே ஒரு காட்சியில் குழந்தைத்தனமாகவும் அடுத்த காட்சியில் மன முதிர்ச்சியோடு பேசுவது சிறிது நெருடுகிறது. அம்மு-கெளரிசங்கர் மணவாழ்க்கைக்கு ஒரு மசாலா பட வில்லன் கதாபாத்திரத்தால்தான் பிரச்சனை வரவேண்டுமா என்ன? வேறெதாவது யோசித்திருக்கலாம்.



அம்முவாக நடித்திருக்கும் பாரதி அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். கண்கள் அப்படியொரு அழகு. அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம். பார்த்திபனுக்கு அவருக்கேற்ற 'டெம்ப்ளேட்' கதாபாத்திரம். 'அண்டர்ப்ளே' செய்திருப்பது பாராட்டுக்குரியது.

இசை சபேஷ்-முரளி. 'உன்னைச் சரணடைந்தேன்' என்று ஆரம்பித்து எழுதிக்கொடுத்தால் நன்றாக இசையமைப்பார்கள் என்று நினைக்கிறேன் ['தவமாய் தவமிருந்து' படத்திலும் 'உன்னைச் சரணடைந்தேன்' பாடல் நன்றாக இருக்கும்]. பின்னணி இசை நிறைய ரீப்பீட்டு.

ஒரு திரைப்படத்தின் கதைக்களன் தான் பார்வையாளர்களை அந்த திரைப்படத்துடன் ஐக்கியப்படுத்துகிறது. கதைக்களனுக்கு ஏற்றவாறு வலுவான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படங்கள் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்று மிகச் சிறந்த திரைப்படங்களாக போற்றப்படுகின்றன. அதே நேரம் அடித்து ஆடவேண்டிய அட்டகாசமான கதைக்களனில் சொதப்பலான திரைக்கதையால் மொக்கையாகிப்போன படங்களும் உண்டு. 'அம்முவாகிய நான்' இந்த இரண்டிற்கும் நடுவில் ஊசலாடுகிறது. பாலியல் தொழிலாளியான அம்முவின் வாழ்க்கையை கதைக்களனாக எடுத்த இயக்குனர் பத்மாமகன் அந்த வலுவான களனுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைக்கவில்லையோ என்ற எண்ணம் படம் பார்த்ததும் தோன்றுகிறது. ஆனாலும் 'அம்முவாகிய நான்' சராசரி மசாலா படங்களுக்கிடையே கண்டிப்பாக ஒரு படி மேலே தான்.