Wednesday, December 12, 2007

Little Miss Sunshine

தோல்வியடைந்தவர்கள் பற்றிய கதைகள் எப்போதுமே நம்மை பாதிக்கின்றன. கதாபாத்திரம் தோற்றுப்போவதாகக் காட்டும் திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கலங்கச் செய்கின்றன. அந்த தோல்வியிலிருந்து மீண்டு போராடி வெல்லும் கதாபாத்திரங்கள் மனநிறைவைத் தருகின்றன. அத்தகைய கதாபாத்திரங்கள் தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிப் பார்க்கிறோம். சில சமயங்களில் அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே இருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் திரைப்படத்தின் முடிவும் நம் மனதை பாரமாக்கிவிடுமாறே அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் படம் நெடுக மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் Little Miss Sunshine(2006).




"There's two kinds of people in this world, there's winners and there's losers. Okay, you know what the difference is? Winners don't give up."


ரிச்சர்ட் ஹூவர் மேலாண்மை பேச்சாளராக முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். வயதான தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். மூத்த மகன் ட்வெயின். குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட இளைஞன். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன். ஃப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியராக இருந்து காதல்(?) தோல்வியால் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன். இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.

ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ஹூவர் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி. ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ வலிந்து திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை. படத்தின் முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.




எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது. குறிப்பாக எட்வின், ஃப்ராங்க் பேசும் வசனங்கள் அட்டகாசம். அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் புன்னகையை வரவைக்கின்றன.

படத்தில் ஸ்டார்கள் யாருமில்லை. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாய்ப் பொருந்துகிறார்கள். தங்கள் பங்கைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். தாத்தா எட்வினாக நடித்த Alan Arkin இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். ஆலிவாக நடித்திருக்கும் Abigail Breslin ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். குடும்பத்தினரின் சோகம், கோபம், ஏமாற்றம் எல்லாவற்றுக்கும் வடிகாலாக இருக்கும் ஆலிவாக நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். ரிச்சர்டாக Steve Carell அசத்தியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலிருக்கும் கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சிகளைப் (நிறையவே இருக்கின்றது) பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன். ஹூவர் குடும்பத்தினர் பயணிக்கும் வேனைப் போலவே சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.

"Losers are people who are so afraid of not winning, they don't even try."

'Little Miss Sunshine' போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா எட்வின் சொல்லும் இந்த வசனமே படத்தின் அடிநாதம். தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன. தோல்விகளைக் கடந்து ஹூவர் குடும்பத்தினரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, December 11, 2007

எவனோ ஒருவன்



நடிகர் மாதவன் நடித்து தயாரித்திருக்கும் படம். படத்திற்கு வசனமும் அவரே எழுதியிருக்கிறார்.மராத்தியில் வெளிவந்து விருதுகள் வாங்கிக் குவித்த டோம்பிவில் பாஸ்ட் என்ற படத்தின் தமிழாக்கம் தான் எவனோ ஒருவன்.

அந்நியன் பார்த்தீருக்கீங்களா...? அதில் வரும் அம்பி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் நம்ம மாதவன் ஏற்று இருக்கும் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத் தலைவனாய் மாதவன். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. அவர் மனைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயாக சங்கீதா.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிபாடங்களும், அரசாங்கமு சுட்டிக் காட்டும் விதிகளைப் பின்பற்றி வாழும் கொள்கையாளன் நம் நாயகன். அதன் மூலம் அவனுக்கு கிடைப்பது சமூகத்தின் கேலிப்பேச்சுக்களும், ஏளன பார்வைகளும் ,பைத்தியக்காரன் என்ற பட்டமுமே.. இருப்பினும் தன் கொள்கையில் நிலையாய் நிற்கிறான் நாயகன். தன் கொள்கையால் தன் குடும்பம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.

இயலாமை ஆற்றாமை என அனைத்தும் ஒரு கட்டத்தில் பொறுமையின் எல்லை தொடும் போது நாயகனின் கோபம் வன்முறையாய் வெடிக்கிறது.. அதன் பின் தொடரும் நாயகனின் நடவடிக்கைகள், நிகழ்வுகள் என முடிந்த அளவில் யதார்த்தம் கலையாமல் சொல்ல முயன்று இருக்கிறார்கள்..

நாயகனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை படத்தின் துவக்கத்தில் ஒரு சில வினாடிகளில்லே பார்வையாளர்களின் மனத்தில் பதியுமாறு செய்து இருக்கும் அந்தப் படத்தொகுப்பு கச்சேரி அருமையிலும் அருமை.. நகர வாழ்க்கையில் நடுத்தர வர்க்கம் பற்றி ஒரு காட்சி கவிதையே வடித்திருக்கிறார் இயக்குனர். அடுக்குமாடி குடியிருப்பு, தண்ணீர் லாரி, தண்ணீர் பிடிக்க நிற்கும் வரிசை, அவசரக் கதி சமையல், காலை நேர நாளிதழ், பழவந்தாங்கல் ரயில் நிலையம், மின்சார ரயில் நெரிசல்,சென்னை வங்கி, டிபன் பாக்ஸ் உணவு, மாலை நேர டீக்கடை...என குறைந்த அவகாசத்தில் சொல்லிவிடுகிறார்.

ஆங்காங்கு நடக்கும் சின்ன சின்ன சட்ட மீறல்கள் பொருட்டு நாயகன் குமைந்தாலும் அதை எதிர்க்க அவன் களம் இறங்குவதில்லை.. ஆனால் தான் அது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகக் கட்டாயப்படுத்தும் போது அவன் அதற்கு இணங்காமல் ஒரு போராளியாக பொங்கியெழுகிறான்.

நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்விகள் தான்.... எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்...எதுக்கு அதிக காசு கொடுத்து சில சலுகைகளைப் பெறணும்... இந்தக் கேள்விகள் நமக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழ பழகிவிட்டோம்.. ஆனால் நம் கதை நாயகனால் அப்படி இருக்க முடியவில்லை...

தலை குனிந்தே பழக்கப்பட்ட மக்களில் எவனோ ஒருத்தன் தலை நிமிர்ந்தால் அவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்தாலும் குடும்பத்தாலும் எப்படி எல்லாம் பார்க்கப்படுகிறான், நடத்தப்படுகிறான் என்பதே படத்தின் பின்பாதி..

இப்படி ஒரு யதார்த்தமானக் கதையைத் தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கியதற்கு தயாரிப்பாளர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வசனகர்த்தா மாதவனும் படத்தின் பல இடங்களில் ஜெயித்திருக்கிறார்.

நடிகர் மாதவனுக்கு வருவோம்....அற்புதமான வாய்ப்பு... தன்னால் இயன்ற வரை அதில் தன்னை வெளிபடுத்தியிருக்கிறார்...குறிப்பாக பிற்பாதியில் வானம் பார்த்து தன் நிலையை கடவுளிடம் அவர் பேசுவதாய் அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில் நடிகர் மாதவனும் வசனகர்த்தா மாதவனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

சங்கீதா... இல்லத்தரசியாக இயல்பான நடிப்பில் வெற்றி கொடி கட்டியிருக்கிறார்.தன்னுடைய சின்ன சின்னக் கனவுகளுக்கு குறுக்கே கணவனின் கொள்கை குறுக்கே வரும் போது மறுகுவதும்... மன்றாடுவதும்... சண்டைப் போடுவதும் என முற்பாதியில் கலக்கும் அவர்... பிற்பாதியில் காணாமல் போன கணவனின் பாதுகாப்பிற்காக உருகுவது என நடிப்பில் நெகிழ செய்கிறார்.

சீமான்... அவருக்கு மிகவும் கனமான வேடம்.. நாயகனைத் தேடி அலையும் காவலதிகாரி வேடம்.. இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே சீமான் என சொல்ல வைக்கிறது. வேட பொருத்தம் கச்சிதம் ஆனால் வாய்ஸ் மாடுலேஷனில் கவனம் செலுத்தியிருக்கணும்... நடிப்பில் சீமான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

காவலர்களின் மனரீதியான பிரச்சனைகள் சீமான் கதாபாத்திரம் மூலம் அலசப்படுகிறது... சீமான் தன் மனைவியிடம் " நான் வாங்குற சம்பளத்துல்ல நீ குடும்பம் நடத்த முடியுமா ?" எனக் கேட்க அதற்கு அவர் மனைவி "முடியும்ன்னு தோணல்ல" என பதில் சொல்வது லஞ்சம் என்பது எத்தனை தூரம் அன்றாட வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது என சுருக்கென தைக்கிறது..

ஓவியம் வரையும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம் படம் நெடுக வரும் இன்னொறு குறிப்பிடத்தகுந்த வேடம்... அந்தச் சிறுவனின் அமைதியான நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது..

சீமானின் மனைவியாக தேவதர்ஷினி, மாதவனின் நண்பனாக ரேடியோ மிர்ச்சி செந்தில் என ஆங்காங்கு தெரிந்த முகங்கள் சின்னஞ்சிறு வேடங்களில் வருகிறார்கள்.

பாடல்கள் இல்லை... படம் முடியும் போது ஒலிக்கும் ஒரு பாடலைத் தவிர..இசை ஜி.வி.பிரகாஷாம்.. பெரிய வேலை இல்லை அவருக்கு. பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமே சார்.

அன்றாட வாழ்க்கை துவங்கி காவல் துறையின் அலட்சியம்,கல்விக் கொள்ளை, மருத்துவத் துறை சீர்கேடு, அரசியல் அராஜகம் என எல்லாவற்றையும் கூடுமானவரை யதார்த்தம் கெடாமல் சாட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். மராத்திய இயக்குனர் நிஷிகாந்த்கு இது தமிழில் முதல் படம். பாராட்டும் படியான முயற்சி. வாழ்த்துக்கள்

காலம் காலமாக தலை குனிந்த பழக்கப்பட்ட சமுதாயத்தில் எவனோ ஒருவன் தலை நிமிர்த்தினாலும் அவன் தலை அழுத்தப்படுகிறது... மீறி அவன் தலை நிமிர்ந்தால் அவன் தலை எடுக்கப்படுகிறது.. அப்படி இருந்தும் காலம் காலமாக எங்கோ எவனோ ஒருவன் தலை நிமிர்த்திக் கொண்டுதானிருக்கிறான்..அவனாலே தான் நம் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்ற ரீதியில் படம் முடியும் தருவாயில் ஒலிக்கும் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது..

கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவமாய் எவனோ ஒருவன் அமைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை...

நிச்சயம் பாருங்கள்... எவனோ ஒருவன் நம்மில் ஒருவன்...

Sunday, December 2, 2007

ராமேஸ்வரம் -யாழ்பணத்திலிருந்து 36 மைல்



போஸ்டரில் பாவனா..தலைப்பில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனையைக் குறிக்கும் வாசகம். பெரும்பான்மையான மக்கள் திரையரங்குக்கு வரக் காரணம் இது தான்.

இலங்கை விட்டு தமிழகம் அகதியாய் வரும் ஒரு இளைஞன் இங்கிருக்கும் ஒரு பெரும் பணக்காரரின் மகளின் காதலில் சிக்குகிறான்(!!!???) காதல் வெல்கிறதா என்பது தான் கதை...

இயக்குனர் செல்வா புதுசு... இசையமைப்பாளர் நிருவும் புதுசு..பாடல்கள் நல்லாயிருக்கு...கேக்கலாம்.. எல்லாரையும் ஏற்றி போக கப்பல் வருமா... எதோ சொன்ன புள்ள..பாடல்கள்..ரசிக்கலாம்.

ஜீவா நாயகன். பாவனா நாயகி. மலையாள லால் ஜோஸ் பணக்கார அப்பா. இது தவிர நாயகனின் தாத்தாவாக மணிவண்ணன், நாயகியின் பாட்டியாக வெண்ணிற ஆடை நிர்மலா, நாயகியின் முறை மாமனாக போலீஸ் வேடத்தில் மெட்டி ஒலி போஸ்...இது தவிர நாயகனின் நண்பர்களாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வேடத்தில் வரும் நடிகர்கள்..அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஸ்னேக் சாந்தி மற்றும் கால் இழந்தவராக வரும் நடிகர் ஒருவர்.

அகதி வாழ்க்கையில் சிக்கி காதலுக்கும் இன உணர்வுக்கும் தாத்தா மீது கொண்ட பாச உணர்வுக்கும் இடையில் உழலும் கதாபாத்திரத்தில் ஜீவா... இயக்குனரின் குழப்பமானத் திரைக்கதை அமைப்பில் இந்த நடிகர் காணாமல் போகிறார்.

பாவனா தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அபத்தமான கதாநாயகி வேடம்.. என்ன பாவடைத் தாவணி, சுடிதார், சேலை என பராம்பரிய உடைகளில் வந்து போகிறார். அழகாய் இருக்கிறார். ஜீவாவைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார்.

லால் ஜோஸ் மலையாள மனிதரை படம் நெடுக வேட்டித் தூக்கி வசனம் பேசும் பெரிய மனிதராக நடமாட விட்டிருக்கிறார்கள். தமிழ் படங்களில் வரும் நாயகியின் தந்தை கம் வில்லன் வேட. இன்னொரு நல்ல நடிகர் அதிகம் வேலை இல்லாத வேடத்தில்

மணிவண்ணன் பாசமானத் தாத்தாவாக சென்டி மெண்ட் பொழிந்து செத்துப் போகிறார். வெண்ணிற ஆடை நிர்மலா கிட்டத் தட்ட சந்திரமுகியில் வரும் பிரபுவின் என்னக் கொடுமை இது சரவணன் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார்.

காதலுக்கு துணையாகவும் குறுக்காகவும் மாறி மாறி அணிவகுக்கும் நண்பர்கள்.. புரியல்லயா...சத்யமாப் படம் பார்த்தப்போ எனக்கும் புரியல்ல...கிட்டத்தட்ட நம்மைப் போலக் குழப்பத்தில் நாயகனும் ஒரு கட்டத்தில் நான் காதலிக்கலாமா என வாய் விட்டு அவர் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிறார்...அப்படி ஒரு குழப்பம்.

என்ன சாமி கதை... ஒரு பணக்கார பொண்ணு வலியப் போய் தன்னை விட வசதி குறைந்த ஒரு பையனைக் காதலிக்குது.. இது நாங்கப் பாக்காதக் கதையான்னு கேக்குறீங்களா?

அதுக்குத் தான் படத்துல்ல விக்குற மேட்டர் ஒண்ணு வச்சிருக்கோம்ல்லன்னு இயக்குனர் சொல்லுறார்....என்னக் கேக்குறீங்களா?

புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரச்சனை....

ஒரு கற்கால தமிழ் சினிமா பார்முலாக் காதல் கதைக்கு ஒரு இனத்தின் பல்லாண்டு கால அழுத்தமான வாழ்க்கைப் பிரச்சனை ஊறுகாயாக பயன்படுத்துள்ளது மிகவும் வருத்தமான விசயம்.

நாயகி நாயகன் மீது காதல் கொள்ள எந்த விதமான அழுத்தமானக் காரணமும் காட்டப் பட வில்லை...என்பதில் துவங்கி...திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள்...

RAMESWARSAM - YET ANOTHER ATTEMPT BY TAMIL CINEMA TO AIMLESSLY EXPLOIT THE SRILANKAN TAMIL ISSUE

Tuesday, November 27, 2007

Casablanca

பட்டையைக் கிளப்பும் வசனங்கள், ஹம்ஃப்ரீ போகார்ட்டின்(Humphrey Bogart) நடிப்பு-வசன உச்சரிப்பு, இங்ரிட் பெர்க்மெனின் (Ingrid Bergman) அழகு, இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள கேசப்பிளாங்கா என்ற ஊரில் நடக்கும் கதை. புரட்சியாளர்களும் பொதுமக்களும் கேசப்பிளாங்கா வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.

ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக்(Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.




ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.

பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள். அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.





இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ரிக்-கிற்கும் இல்சாவிற்குமிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது.

ரிக்-காக ஹம்ஃப்ரி போகார்ட்(Humphrey Bogart). வசன உச்சரிப்பும் பாடி லேங்குவேஜும் முகபாவங்களும்...அவரின் ரசிகனாகிவிட்டேன். அதே போல் இங்க்ரிட் பெர்க்மெனின் அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும்.

படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது இங்க்ரிட் பெர்க்மெனின் நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம்.

ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும். இதுவரை நான்கைந்து முறை பார்த்த பின்னும் அலுப்படையவில்லை.

உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் திரைப்படம் Casablanca. மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.

படம் முடிகையில் முகத்திலே ஏற்படும் புன்னகை சில மணி நேரங்களுக்காவது நம்மோடு இருக்கும்.

பில்லா-2007(??) பாடல்கள்


தல'யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பில்லா 2007. ஏற்கனவே SRK நடித்தும் வெற்றி பெற்றது Don என்பது எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தானே. அதுக்கு முன்னாடி வளர்த்தி நடிகர் நடிச்சதாமே. இங்கே அதையே ரஜினி பண்ண, SRK செஞ்சத அஜித் பண்ண வந்திருக்காரு.

இசை: யுவன் சங்கர் ராஜா.
(அதிகமா ரீமிக்ஸ் பாடலகள் செய்திருப்பதாலோ என்னவோ இந்த ரீ மிக்ஸ் படத்திற்கும் இவரையே இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது விஷ்ணுவர்த்தனின் படத்துக்கு இதுவரை இசை அமைத்தவரும் இவரே.(குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் ) மூன்றிலுமே ரீமிக்ஸ் பாடல்கள் கலக்கியது நினைவு இருக்கும்.

இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஒரு தீம் இசை உட்பட.


My Name is Billa - பாடியது நவீன் மற்றும் கே. கே.
இது ஒரு ரீமிக்ஸ் பாட்டு என்பதால் அதிகம் மெனக்கெடாமல் பழைய பாட்டுக்கு புது இசை சேர்த்துள்ளார் யுவன். ஆனால் கிணத்துக்குள்ளே இருந்து பாடுவது மாதிரி ரெகார்டிங். இந்தப் பாட்டை இப்படித்தான் கெடுக்கனும் முடிவு பண்ணி செஞ்சு இருக்காங்க. Sound Recordingல் பாடல் கேட்பதே இல்லை, வெறும் சத்தம் தான்..(1.5/5)

செய், ஏதாவது செய்: பாடியது நித்யா ஸ்ரீ மஹாதேவன்.
ஏதோ ஒரு ஐட்டம் பாட்டு போல் இருக்கு. கேட்க நல்லாவும் வார்த்தைகளில் கொஞ்சம் அளவும் மீறி இருக்காங்க. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் இன்னொரு பாடல். Sounds like தீ தீப்பிடிக்க remix. Nothing Special(1.5/5)

Theme Music- Yuvan Sankar Raja.
கேட்க நல்லா இருக்கு, கிதார் உபயோகப்படுத்திய விதம் அருமை. பழைய கிதார் இசையை electronic கிதாரில் கொண்டு வந்த விதம் புதுசு.

நான் மீண்டும் நானாக வேண்டும்: பாடியது தீபிகா.
மேலும் ஒரு ஐட்டம் பாடல். விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் விஷேசம் இல்லாத பாடல் (1/5). கிதார் விளையாட்டு இதிலும் உண்டு. அதனால தான் 1/5, இல்லைன்னா (0/5)

சேவல் கொடி: பாடியது விஜய் ஜேசுதாஸ்.
இந்தப் படத்தில் முதன்மையான பாடல் இதுதான். முருகனை போற்றிப் பாடுமாறு அமைந்திருக்கிறது இந்தப்பாடல். அநேகமான யுவனின் குத்து பாடல்களில் முதல் 5 க்குள் வரும்படியான பாட்டு. அதேபோல் முருகனைப் போற்றி பாடிய பாடல்களில், சூப்பர் குத்துப் பாட்டு இதுவாகத்தான் இருக்கும். குத்துன்னா குத்து... செம குத்து. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாட்டு இது. அதுவும் அஜித்க்கு intro பாட்டா இதுவே இருந்தா பிரமாண்டமான ஓப்பனிங்கா இருக்கும். (4/5)

வெத்தலைய போட்டேண்டி: பாடியது ஷங்கர் மஹாதேவன்
இன்னும் ஒரு ரீமிக்ஸ் பாடல் மாதிரி ஆனா ரீ மிக்ஸ் இல்லை. கொஞ்சம் குத்து கொஞ்சம் மேற்கத்திய இசைன்னு கலக்கிய விதம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கு. (2.5/5)

ஆக மொத்தம் பில்லா பாடல்களுக்கு கீத்துக்கொட்டாய் குடுக்கும் மதிப்பெண் * * (2/5)

Friday, November 23, 2007

அழகிய ''காப்பி" மகன்

படத்தை எல்லாம் பாருங்க.. என்னக் கமெண்ட் அடிக்கணுமோ அடிங்கய்யா..




முடியல்ல.....ம்ம்ம்ம்...முடியல்ல.. ஸ்ப்பா இப்பவேக் கண்ணைக் கட்டுதே



அய்யா ஆல் ரவுண்ட் கில்லி மா



என்னக் கொடுமை இது (டாக்டர்) சரவணன்??



TRuE BluFF MAstER



எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாக்க மாட்டோமோ...



முடிவெடுத்துட்டா முடிவை மாத்துறதே இல்ல... நல்லாயிருங்கப்பா...

அதுமட்டும் இல்லீங்கண்ணா, காப்பி இன்னும் தொடரும்.
கதை: 1990ல் வெளி வந்து, மம்முட்டி நடித்த "ஐயர் தி கிரேட்"
விஜய் சொல்லும் கவிதை(?!): எஸ்.வி. சேகர்.
எல்லா காமெடியும்(?!): பழைய படங்களும், புத்தகங்களும். அசத்தப்போவது யாரு, இல்லேன்ன கலக்கப் போவது யாரு டீமுக்கு அவுட் சோர்ஸ் பண்ணி இருக்கலாம். எல்லாம் பழசு.
விஜயின் நடனம்: புது மூவ்மெண்ட்ஸா இல்லியா விஜய் சார்? சத்தமே இல்லைன்னா கூட செம குத்தாட்டம் போடுவாரு போல. (வெளங்கிரும்). எதுக்குய்யா இப்படி ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கனும். "அ ஆ" படத்துல சூர்யா பாட்டே சூப்பரு.

Wednesday, November 21, 2007

Anukokunda Oka Roju

ஒரு நாள் முழுக்க என்ன நடந்ததென்றே தெரியாமல் அனைத்தும் மறந்துபோனால் எப்படியிருக்கும்? அன்று நமக்கு என்ன நேர்ந்தது, என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதெல்லாம் பெரும் புதிராக இருக்குமல்லவா? அன்று நடந்த நிகழ்வுகளை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்துவிட துடிப்போம் அல்லவா?

வழக்கமான மசாலா கதைகளைத் தவிர்த்து வித்தியாசமான கதையுடன் சுவாரசியமான நெருடலில்லாத திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் Anukokunda Oka Roju.

சஹஸ்ரா பின்னணி பாடகி. கல்லூரி மாணவி. ஒரு நாள் தன் தோழியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு அவருக்குத் தெரியாமல் நண்பர்கள் அவருக்கு போதை மருந்து தந்துவிடுகிறார்கள். சஹஸ்ரா அங்கிருந்து தானாகக் கிளம்பிவிடுகிறார். வீட்டிற்கு வந்து தூங்கி விழிக்கும் சஹஸ்ரா இரண்டு நாட்கள் கடந்துவிட்டதை உணர்கிறார். தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்கிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து அவரை ஒருவன் கொலை செய்ய முயற்சிக்கிறான். தான் சுயநினைவு இழந்த அன்று ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்கிறார் சஹஸ்ரா. அன்று தன்னை வீட்டில் விட்ட டாக்ஸி டிரைவர் உதவியுடனும், போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு உதவியுடனும் பல்வேறு துப்புகளைப் பின் தொடர்ந்து அன்று என்ன நடந்ததெனக் கண்டுபிடிக்கிறார்கள்.

படத்தின் முற்பாதியில் காமெடியாகவும் பின்னர் சஹஸ்ராவிற்கு அன்று என்ன நடந்ததென சஸ்பென்ஸை எழுப்பிவிட்டு பிற்பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து சுவாரசியமாக படமாக்கியிருக்கிறார்கள்.



சஹஸ்ராவாக 'காதல் அழிவதில்லை' புகழ்(?!)சார்மி. படத்தின் ஆரம்பத்தில் ஜாலியான கல்லூரி மாணவியாகவும் பின்னர் ஒரு நாள் என்ன நடந்ததெனத் தெரியாமல் தவிப்பதிலும் அம்மணி வெளுத்துக் கட்டியிருக்கிறார். அவர் நடித்து நான் பார்த்த இரண்டு மூன்று படங்களில் இந்த படத்தில் ரொம்பவே அழகாகயிருக்கிறார். சிறப்பாக நடித்திருக்கிறார்.

சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெகபதி பாபு. தெனாவெட்டான கதாபாத்திரத்திற்கு மனிதர் கச்சிதமாகப் பொருந்துகிறார். நக்கலான டைமிங் டயலாக்குகளும் பின்னர் சார்மியை ஈர்ப்பதற்காக அவர் செய்யும் சில்மிஷங்களும் கலக்கல்ஸ் ஆப் ஹைதராபாத். டாக்ஸி டிரைவராக நான் இதற்கு முன்னர் பார்த்தேயிராத ஹீரோ. பெயர் சஷாங்க்-காம். நன்றாகவே நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் சஹஸ்ரா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் நடக்கும் காமெடி காட்சிகள் படு ஜாலி. அதிலும் தம்முடு வாத்தியார் ஒருவர் கலக்கியிருக்கிறார். அரைகுறை ஆங்கிலத்தில் அனைவரிடமும் ஆப்பு வாங்குவதில் ஸ்பெஷலிஸ்ட். ஆங்கிலத்தை பிச்சி உதறுவார். ஒரு உதாரணம் - 'You dance. I glance'. ஒரு ஹிந்தி ஆண்ட்டியுடன் இவர் சண்டை கட்டும் காட்சிகள் செம காமெடி.

நாயகி பின்னணி பாடகி. ஆனாலும் பாடல்கள் ஓகே ரகம் தான். த்ரில்லர் படமென்று காட்சிகளைத் த்ரில் ஆக்குவதாக நினைத்து பின்னணி இசையை ஓவர் இரைச்சல் ஆக்காமல் சிறப்பாகவே அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஜாலியான வசனங்கள் படத்தின் பெரும்பலம். மிகவும் சீரியசான காட்சியில் கூட யாராவது டைமிங் ஜோக் அடிக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கி அதற்கேற்றவாறு சற்றும் தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் அனுகொகுண்ட ஒக்க ரோஜு - மன்ச்சு ஃபிலுமு.