Thursday, January 17, 2008

பீமா - பொங்கல் பார்வை

இந்தப் பொங்கலுக்குப் பார்த்த படம் பீமா.


நடிகர்கள்: சீயான் விக்ரம், த்ரிஷா,பிரகாஷ் ராஜ்,ரகுவரன்,தலை வாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர்

இயக்கம்: லிங்குசாமி இசை: ஹாரீஸ் ஜெயராஜ். வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன். கேமரா: ராஜசேகர். சண்டை: கனல் கண்ணன்

கதை தமிழ் சினிமாவுக்கு பழக்கமான தாதாக்கள் சம்பந்தப் பட்ட விஷய்ம் தான். தளபதி,உல்லாசம் எனப் பழைய படங்களில் பார்த்த கதையின் தாக்கம் இருந்தாலும் அதைப் படமாக்கியிருக்கும் விதம் பீமாவை வேறுபடுத்தி காட்டுகிறது. சென்னை நகரத்து தாதா வாழ்க்கையை சினிமாவாக சொல்ல முயன்று இருக்கும் இன்னொரு படம் பீமா என்பதாகவே படம் நகர்கிறது. பீமா முழுக்க முழுக்க யதார்த்தமான சினிமா எனவும் சொல்ல முடியாது..முழுக்க முழுக்க மசாலா படம் எனவும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்த ஒரு கோர்வை எனச் சொல்லலாம்.

கதையின் முக்கிய பாத்திரம் சின்னாவாக பிரகாஷ் ராஜ்... சின்னாவைச் சுற்றிய கதைப் பின்னப்பட்டுள்ளது. சின்னாவின் தொழில் எதிரி பெரியவராக ரகுவரன் ( கிட்டத்தட்ட தளபதியில் ஓம் பூரி ஏற்ற கலிவரதன் வேடத்தை நினைவுப் படுத்தும் வேடம்) சின்னாவின் நம்பிக்கைக்குரிய கையாளாக தலைவாசல் விஜய் ( தளபதியில் நாகேஷ் வருவாரே)..

இதில் விக்ரமுக்கு என்ன வேடம் என்ற கேள்வி கேட்பது புரிகிறது..சிறுவயதில் இருந்து சின்னாவின் ரசிகனாக வளர்ந்து பின்னாளில் சின்னாவீன் தளபதியாக உயரும் சேகர் என்னும் இளைஞனின் வேடத்தில் வருகிறார்.(தளபதியில் ரஜினி ஏற்ற சூர்யா வேடம் மாதிரி)

சேகரின் வரவுக்குப் பின் சின்னாவின் கை தொழில் ஓங்குகிறது..பெரியவரோடானப் பகை முற்றுகிறது. சின்னாக் கூட்டத்தில் சேகருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சின்னாக் கூட்டத்தில் வெகுகாலமாக இருக்கும் இன்னொருத்தனை மனக்கலக்கத்தில் ஆழ்த்துகிறது.. அந்த குரோதம் தனிக்கிளையாக வளர்கிறது.

வெட்டுக் குத்து,அருவா, துப்பாக்கி என நகரும் கதையில் கொஞ்சம் சில்லென ஒரு காதலுக்கு த்ரிஷா. கோடம்பாக்கம் வகையானக் கண்டதும் காதல். விக்ரமைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார் த்ரிஷா. எதற்கும் மயங்காத விக்ரம் ஒரு கட்டத்தில் திரையரங்கின் அரை வெளிச்சத்தில் த்ரிஷா மீது காதலாகி கசிந்துருகுகிறார்.

காதல் போதையில் தொழிலில் கவனம் சிதறி நிற்கும் விக்ரம்... இனி தன்னால் இப்படி இருக்க முடியாது என்றும் தான் தொழிலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பிரகாஷ் ராஜிடம் சொல்லிவிட்டு த்ரிஷாவைக் கைப்பிடிக்க கிளம்புகிறார்.

விக்ரம் விலகலை நல்ல தருணம் எனக் கருதி பெரியவர் சின்னாவை வட்டம் போடவும்.. காவல் துறை கமிஷனர் ஆஷிஷ் வித்யார்த்தி சமயம் சரி என இரு கூட்டத்தையும் களை எடுக்க களத்தில் என்கவுண்டர் படையை இறக்கி விடுகிறார்.. அதைத் தொடரும் ரத்தக் களறியான க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது. பொதுவான ரசனை உள்ள மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குரியது.

நடிப்பில் விகரமும் பிரகாஷ்ராஜ்க்கு பலத்தப் போட்டி... செல்லம் சின்னா வேடத்தை அதிக மெனக்கெடல் இன்றி பக்காவாகச் செய்திருக்கிறார்... வழக்கம் போல் பிரகாஷ்ராஜ் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்...

விக்ரம் நாயகனாக கட்டுமஸ்தாக வருகிறார், வித்தியாசம் காட்ட வேண்டும் என ஓட்ட வெட்டிய முடியும், தாடியும் என சத்யா கமலை நினைவுபடுத்தும் தோற்றத்தில் வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார், தாவுகிறார், நல்லா சண்டை போடுகிறார்.... சினிமாத்தனமும் யதார்த்தமும் கலந்த ஒரு ஹிரோ வேடத்தில் பொருந்தி போகிறார். ஆக்ஷன் ஹிரோவாக அதிக ஆர்பாட்டமின்றி ஜெயித்திருக்கிறார்.

த்ரிஷாவுக்கு அக்மார்க் கமர்ஷியல் நாயகி வேடம். கண்டதும் காதல்... பின் காதலைத் துரத்தல்... கனவு காணுதல்... ஆடல்..பாடல்... காதலில் தவித்தல்... என பார்மூலா ரோல்...க்ளைமேக்ஸில் அச்சோ சொல்லும் படியாக அவரது வேடம் சிறப்பு பெறுகிறது.மொத்தத்தில் த்ரிஷா அழகாய் வந்து போகிறார்.

ரகுவரனுக்குப் பல படங்களில் பார்த்த அதே வில்லன் வேடம். வழக்கம் போல் நன்றாகவே செய்து இருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும் வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். சட்டத்து நல்லவரான ஒரு போலீஸ். கொஞ்சமே வருகிறார் கடமையாற்றுகிறார்.

தலைவாசல் விஜய்க்கு நாயகனில் டெல்லி கணேஷும், தளபதியில் நாகேஷும், நம்ம லிங்குசாமியின் முந்தைய ரன் படத்தில் விஜயனும் ஏற்றது போல ஒரு வேடம்.. நன்றாகச் செய்துள்ளார்.

ஹாரிஸின் இசையில் பாடல்கள் பிரபலமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.. பாடல்களை படமாக்கிய விதத்தில் பெரிதாய் புதுமைகள் எதுவும் இல்லை...

படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது படத்தில் ஆங்காங்குத் தெரிகிறது. ரங்கு ரங்கம்மா பாடலில் விக்ரமின் ஹேர் ஸடைல் மாற்றத்தையும், கடைசி பாடலில் விக்ரமின் மெலிந்த தேகமும் படத்து கன்டினியூட்டி சொதப்பலுக்கு சாட்சிகள்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரீன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக வரும் மலையாள நாயகி அமைதியான தோற்றத்தில் வசிகரீக்கிறார்.

ராஜசேகரின் கேமராவும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளும் பீமாவுக்கு பெரும் பலம்.

லிங்குசாமி பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ஒரு முறை கோர்த்திருக்கிறார்..அதையே ஒரு எதிரபாராத முடிவோடு சொல்லியிருக்கிறார்.


பீமா - பழைய மொந்தையில் புதிய கள்.... ஆக்ஷன் படப் பிரியர்கள் ரசிக்க விஷ்யமுள்ள படம்.

Tuesday, January 8, 2008

The Bucket List

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.



கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.



எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.

மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.


The Bucket List - வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

Wednesday, December 12, 2007

Little Miss Sunshine

தோல்வியடைந்தவர்கள் பற்றிய கதைகள் எப்போதுமே நம்மை பாதிக்கின்றன. கதாபாத்திரம் தோற்றுப்போவதாகக் காட்டும் திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கலங்கச் செய்கின்றன. அந்த தோல்வியிலிருந்து மீண்டு போராடி வெல்லும் கதாபாத்திரங்கள் மனநிறைவைத் தருகின்றன. அத்தகைய கதாபாத்திரங்கள் தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிப் பார்க்கிறோம். சில சமயங்களில் அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே இருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் திரைப்படத்தின் முடிவும் நம் மனதை பாரமாக்கிவிடுமாறே அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் படம் நெடுக மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் Little Miss Sunshine(2006).




"There's two kinds of people in this world, there's winners and there's losers. Okay, you know what the difference is? Winners don't give up."


ரிச்சர்ட் ஹூவர் மேலாண்மை பேச்சாளராக முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். வயதான தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். மூத்த மகன் ட்வெயின். குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட இளைஞன். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன். ஃப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியராக இருந்து காதல்(?) தோல்வியால் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன். இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.

ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ஹூவர் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி. ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ வலிந்து திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை. படத்தின் முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.




எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது. குறிப்பாக எட்வின், ஃப்ராங்க் பேசும் வசனங்கள் அட்டகாசம். அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் புன்னகையை வரவைக்கின்றன.

படத்தில் ஸ்டார்கள் யாருமில்லை. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாய்ப் பொருந்துகிறார்கள். தங்கள் பங்கைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். தாத்தா எட்வினாக நடித்த Alan Arkin இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். ஆலிவாக நடித்திருக்கும் Abigail Breslin ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். குடும்பத்தினரின் சோகம், கோபம், ஏமாற்றம் எல்லாவற்றுக்கும் வடிகாலாக இருக்கும் ஆலிவாக நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். ரிச்சர்டாக Steve Carell அசத்தியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலிருக்கும் கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சிகளைப் (நிறையவே இருக்கின்றது) பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன். ஹூவர் குடும்பத்தினர் பயணிக்கும் வேனைப் போலவே சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.

"Losers are people who are so afraid of not winning, they don't even try."

'Little Miss Sunshine' போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா எட்வின் சொல்லும் இந்த வசனமே படத்தின் அடிநாதம். தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன. தோல்விகளைக் கடந்து ஹூவர் குடும்பத்தினரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, December 11, 2007

எவனோ ஒருவன்



நடிகர் மாதவன் நடித்து தயாரித்திருக்கும் படம். படத்திற்கு வசனமும் அவரே எழுதியிருக்கிறார்.மராத்தியில் வெளிவந்து விருதுகள் வாங்கிக் குவித்த டோம்பிவில் பாஸ்ட் என்ற படத்தின் தமிழாக்கம் தான் எவனோ ஒருவன்.

அந்நியன் பார்த்தீருக்கீங்களா...? அதில் வரும் அம்பி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் நம்ம மாதவன் ஏற்று இருக்கும் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத் தலைவனாய் மாதவன். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. அவர் மனைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயாக சங்கீதா.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிபாடங்களும், அரசாங்கமு சுட்டிக் காட்டும் விதிகளைப் பின்பற்றி வாழும் கொள்கையாளன் நம் நாயகன். அதன் மூலம் அவனுக்கு கிடைப்பது சமூகத்தின் கேலிப்பேச்சுக்களும், ஏளன பார்வைகளும் ,பைத்தியக்காரன் என்ற பட்டமுமே.. இருப்பினும் தன் கொள்கையில் நிலையாய் நிற்கிறான் நாயகன். தன் கொள்கையால் தன் குடும்பம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.

இயலாமை ஆற்றாமை என அனைத்தும் ஒரு கட்டத்தில் பொறுமையின் எல்லை தொடும் போது நாயகனின் கோபம் வன்முறையாய் வெடிக்கிறது.. அதன் பின் தொடரும் நாயகனின் நடவடிக்கைகள், நிகழ்வுகள் என முடிந்த அளவில் யதார்த்தம் கலையாமல் சொல்ல முயன்று இருக்கிறார்கள்..

நாயகனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை படத்தின் துவக்கத்தில் ஒரு சில வினாடிகளில்லே பார்வையாளர்களின் மனத்தில் பதியுமாறு செய்து இருக்கும் அந்தப் படத்தொகுப்பு கச்சேரி அருமையிலும் அருமை.. நகர வாழ்க்கையில் நடுத்தர வர்க்கம் பற்றி ஒரு காட்சி கவிதையே வடித்திருக்கிறார் இயக்குனர். அடுக்குமாடி குடியிருப்பு, தண்ணீர் லாரி, தண்ணீர் பிடிக்க நிற்கும் வரிசை, அவசரக் கதி சமையல், காலை நேர நாளிதழ், பழவந்தாங்கல் ரயில் நிலையம், மின்சார ரயில் நெரிசல்,சென்னை வங்கி, டிபன் பாக்ஸ் உணவு, மாலை நேர டீக்கடை...என குறைந்த அவகாசத்தில் சொல்லிவிடுகிறார்.

ஆங்காங்கு நடக்கும் சின்ன சின்ன சட்ட மீறல்கள் பொருட்டு நாயகன் குமைந்தாலும் அதை எதிர்க்க அவன் களம் இறங்குவதில்லை.. ஆனால் தான் அது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகக் கட்டாயப்படுத்தும் போது அவன் அதற்கு இணங்காமல் ஒரு போராளியாக பொங்கியெழுகிறான்.

நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்விகள் தான்.... எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்...எதுக்கு அதிக காசு கொடுத்து சில சலுகைகளைப் பெறணும்... இந்தக் கேள்விகள் நமக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழ பழகிவிட்டோம்.. ஆனால் நம் கதை நாயகனால் அப்படி இருக்க முடியவில்லை...

தலை குனிந்தே பழக்கப்பட்ட மக்களில் எவனோ ஒருத்தன் தலை நிமிர்ந்தால் அவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்தாலும் குடும்பத்தாலும் எப்படி எல்லாம் பார்க்கப்படுகிறான், நடத்தப்படுகிறான் என்பதே படத்தின் பின்பாதி..

இப்படி ஒரு யதார்த்தமானக் கதையைத் தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கியதற்கு தயாரிப்பாளர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வசனகர்த்தா மாதவனும் படத்தின் பல இடங்களில் ஜெயித்திருக்கிறார்.

நடிகர் மாதவனுக்கு வருவோம்....அற்புதமான வாய்ப்பு... தன்னால் இயன்ற வரை அதில் தன்னை வெளிபடுத்தியிருக்கிறார்...குறிப்பாக பிற்பாதியில் வானம் பார்த்து தன் நிலையை கடவுளிடம் அவர் பேசுவதாய் அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில் நடிகர் மாதவனும் வசனகர்த்தா மாதவனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

சங்கீதா... இல்லத்தரசியாக இயல்பான நடிப்பில் வெற்றி கொடி கட்டியிருக்கிறார்.தன்னுடைய சின்ன சின்னக் கனவுகளுக்கு குறுக்கே கணவனின் கொள்கை குறுக்கே வரும் போது மறுகுவதும்... மன்றாடுவதும்... சண்டைப் போடுவதும் என முற்பாதியில் கலக்கும் அவர்... பிற்பாதியில் காணாமல் போன கணவனின் பாதுகாப்பிற்காக உருகுவது என நடிப்பில் நெகிழ செய்கிறார்.

சீமான்... அவருக்கு மிகவும் கனமான வேடம்.. நாயகனைத் தேடி அலையும் காவலதிகாரி வேடம்.. இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே சீமான் என சொல்ல வைக்கிறது. வேட பொருத்தம் கச்சிதம் ஆனால் வாய்ஸ் மாடுலேஷனில் கவனம் செலுத்தியிருக்கணும்... நடிப்பில் சீமான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

காவலர்களின் மனரீதியான பிரச்சனைகள் சீமான் கதாபாத்திரம் மூலம் அலசப்படுகிறது... சீமான் தன் மனைவியிடம் " நான் வாங்குற சம்பளத்துல்ல நீ குடும்பம் நடத்த முடியுமா ?" எனக் கேட்க அதற்கு அவர் மனைவி "முடியும்ன்னு தோணல்ல" என பதில் சொல்வது லஞ்சம் என்பது எத்தனை தூரம் அன்றாட வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது என சுருக்கென தைக்கிறது..

ஓவியம் வரையும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம் படம் நெடுக வரும் இன்னொறு குறிப்பிடத்தகுந்த வேடம்... அந்தச் சிறுவனின் அமைதியான நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது..

சீமானின் மனைவியாக தேவதர்ஷினி, மாதவனின் நண்பனாக ரேடியோ மிர்ச்சி செந்தில் என ஆங்காங்கு தெரிந்த முகங்கள் சின்னஞ்சிறு வேடங்களில் வருகிறார்கள்.

பாடல்கள் இல்லை... படம் முடியும் போது ஒலிக்கும் ஒரு பாடலைத் தவிர..இசை ஜி.வி.பிரகாஷாம்.. பெரிய வேலை இல்லை அவருக்கு. பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமே சார்.

அன்றாட வாழ்க்கை துவங்கி காவல் துறையின் அலட்சியம்,கல்விக் கொள்ளை, மருத்துவத் துறை சீர்கேடு, அரசியல் அராஜகம் என எல்லாவற்றையும் கூடுமானவரை யதார்த்தம் கெடாமல் சாட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். மராத்திய இயக்குனர் நிஷிகாந்த்கு இது தமிழில் முதல் படம். பாராட்டும் படியான முயற்சி. வாழ்த்துக்கள்

காலம் காலமாக தலை குனிந்த பழக்கப்பட்ட சமுதாயத்தில் எவனோ ஒருவன் தலை நிமிர்த்தினாலும் அவன் தலை அழுத்தப்படுகிறது... மீறி அவன் தலை நிமிர்ந்தால் அவன் தலை எடுக்கப்படுகிறது.. அப்படி இருந்தும் காலம் காலமாக எங்கோ எவனோ ஒருவன் தலை நிமிர்த்திக் கொண்டுதானிருக்கிறான்..அவனாலே தான் நம் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்ற ரீதியில் படம் முடியும் தருவாயில் ஒலிக்கும் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது..

கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவமாய் எவனோ ஒருவன் அமைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை...

நிச்சயம் பாருங்கள்... எவனோ ஒருவன் நம்மில் ஒருவன்...

Sunday, December 2, 2007

ராமேஸ்வரம் -யாழ்பணத்திலிருந்து 36 மைல்



போஸ்டரில் பாவனா..தலைப்பில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனையைக் குறிக்கும் வாசகம். பெரும்பான்மையான மக்கள் திரையரங்குக்கு வரக் காரணம் இது தான்.

இலங்கை விட்டு தமிழகம் அகதியாய் வரும் ஒரு இளைஞன் இங்கிருக்கும் ஒரு பெரும் பணக்காரரின் மகளின் காதலில் சிக்குகிறான்(!!!???) காதல் வெல்கிறதா என்பது தான் கதை...

இயக்குனர் செல்வா புதுசு... இசையமைப்பாளர் நிருவும் புதுசு..பாடல்கள் நல்லாயிருக்கு...கேக்கலாம்.. எல்லாரையும் ஏற்றி போக கப்பல் வருமா... எதோ சொன்ன புள்ள..பாடல்கள்..ரசிக்கலாம்.

ஜீவா நாயகன். பாவனா நாயகி. மலையாள லால் ஜோஸ் பணக்கார அப்பா. இது தவிர நாயகனின் தாத்தாவாக மணிவண்ணன், நாயகியின் பாட்டியாக வெண்ணிற ஆடை நிர்மலா, நாயகியின் முறை மாமனாக போலீஸ் வேடத்தில் மெட்டி ஒலி போஸ்...இது தவிர நாயகனின் நண்பர்களாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வேடத்தில் வரும் நடிகர்கள்..அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஸ்னேக் சாந்தி மற்றும் கால் இழந்தவராக வரும் நடிகர் ஒருவர்.

அகதி வாழ்க்கையில் சிக்கி காதலுக்கும் இன உணர்வுக்கும் தாத்தா மீது கொண்ட பாச உணர்வுக்கும் இடையில் உழலும் கதாபாத்திரத்தில் ஜீவா... இயக்குனரின் குழப்பமானத் திரைக்கதை அமைப்பில் இந்த நடிகர் காணாமல் போகிறார்.

பாவனா தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அபத்தமான கதாநாயகி வேடம்.. என்ன பாவடைத் தாவணி, சுடிதார், சேலை என பராம்பரிய உடைகளில் வந்து போகிறார். அழகாய் இருக்கிறார். ஜீவாவைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார்.

லால் ஜோஸ் மலையாள மனிதரை படம் நெடுக வேட்டித் தூக்கி வசனம் பேசும் பெரிய மனிதராக நடமாட விட்டிருக்கிறார்கள். தமிழ் படங்களில் வரும் நாயகியின் தந்தை கம் வில்லன் வேட. இன்னொரு நல்ல நடிகர் அதிகம் வேலை இல்லாத வேடத்தில்

மணிவண்ணன் பாசமானத் தாத்தாவாக சென்டி மெண்ட் பொழிந்து செத்துப் போகிறார். வெண்ணிற ஆடை நிர்மலா கிட்டத் தட்ட சந்திரமுகியில் வரும் பிரபுவின் என்னக் கொடுமை இது சரவணன் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார்.

காதலுக்கு துணையாகவும் குறுக்காகவும் மாறி மாறி அணிவகுக்கும் நண்பர்கள்.. புரியல்லயா...சத்யமாப் படம் பார்த்தப்போ எனக்கும் புரியல்ல...கிட்டத்தட்ட நம்மைப் போலக் குழப்பத்தில் நாயகனும் ஒரு கட்டத்தில் நான் காதலிக்கலாமா என வாய் விட்டு அவர் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிறார்...அப்படி ஒரு குழப்பம்.

என்ன சாமி கதை... ஒரு பணக்கார பொண்ணு வலியப் போய் தன்னை விட வசதி குறைந்த ஒரு பையனைக் காதலிக்குது.. இது நாங்கப் பாக்காதக் கதையான்னு கேக்குறீங்களா?

அதுக்குத் தான் படத்துல்ல விக்குற மேட்டர் ஒண்ணு வச்சிருக்கோம்ல்லன்னு இயக்குனர் சொல்லுறார்....என்னக் கேக்குறீங்களா?

புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரச்சனை....

ஒரு கற்கால தமிழ் சினிமா பார்முலாக் காதல் கதைக்கு ஒரு இனத்தின் பல்லாண்டு கால அழுத்தமான வாழ்க்கைப் பிரச்சனை ஊறுகாயாக பயன்படுத்துள்ளது மிகவும் வருத்தமான விசயம்.

நாயகி நாயகன் மீது காதல் கொள்ள எந்த விதமான அழுத்தமானக் காரணமும் காட்டப் பட வில்லை...என்பதில் துவங்கி...திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள்...

RAMESWARSAM - YET ANOTHER ATTEMPT BY TAMIL CINEMA TO AIMLESSLY EXPLOIT THE SRILANKAN TAMIL ISSUE

Tuesday, November 27, 2007

Casablanca

பட்டையைக் கிளப்பும் வசனங்கள், ஹம்ஃப்ரீ போகார்ட்டின்(Humphrey Bogart) நடிப்பு-வசன உச்சரிப்பு, இங்ரிட் பெர்க்மெனின் (Ingrid Bergman) அழகு, இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள கேசப்பிளாங்கா என்ற ஊரில் நடக்கும் கதை. புரட்சியாளர்களும் பொதுமக்களும் கேசப்பிளாங்கா வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.

ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக்(Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.




ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.

பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள். அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.





இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ரிக்-கிற்கும் இல்சாவிற்குமிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது.

ரிக்-காக ஹம்ஃப்ரி போகார்ட்(Humphrey Bogart). வசன உச்சரிப்பும் பாடி லேங்குவேஜும் முகபாவங்களும்...அவரின் ரசிகனாகிவிட்டேன். அதே போல் இங்க்ரிட் பெர்க்மெனின் அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும்.

படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது இங்க்ரிட் பெர்க்மெனின் நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம்.

ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும். இதுவரை நான்கைந்து முறை பார்த்த பின்னும் அலுப்படையவில்லை.

உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் திரைப்படம் Casablanca. மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.

படம் முடிகையில் முகத்திலே ஏற்படும் புன்னகை சில மணி நேரங்களுக்காவது நம்மோடு இருக்கும்.

பில்லா-2007(??) பாடல்கள்


தல'யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பில்லா 2007. ஏற்கனவே SRK நடித்தும் வெற்றி பெற்றது Don என்பது எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தானே. அதுக்கு முன்னாடி வளர்த்தி நடிகர் நடிச்சதாமே. இங்கே அதையே ரஜினி பண்ண, SRK செஞ்சத அஜித் பண்ண வந்திருக்காரு.

இசை: யுவன் சங்கர் ராஜா.
(அதிகமா ரீமிக்ஸ் பாடலகள் செய்திருப்பதாலோ என்னவோ இந்த ரீ மிக்ஸ் படத்திற்கும் இவரையே இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது விஷ்ணுவர்த்தனின் படத்துக்கு இதுவரை இசை அமைத்தவரும் இவரே.(குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் ) மூன்றிலுமே ரீமிக்ஸ் பாடல்கள் கலக்கியது நினைவு இருக்கும்.

இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஒரு தீம் இசை உட்பட.


My Name is Billa - பாடியது நவீன் மற்றும் கே. கே.
இது ஒரு ரீமிக்ஸ் பாட்டு என்பதால் அதிகம் மெனக்கெடாமல் பழைய பாட்டுக்கு புது இசை சேர்த்துள்ளார் யுவன். ஆனால் கிணத்துக்குள்ளே இருந்து பாடுவது மாதிரி ரெகார்டிங். இந்தப் பாட்டை இப்படித்தான் கெடுக்கனும் முடிவு பண்ணி செஞ்சு இருக்காங்க. Sound Recordingல் பாடல் கேட்பதே இல்லை, வெறும் சத்தம் தான்..(1.5/5)

செய், ஏதாவது செய்: பாடியது நித்யா ஸ்ரீ மஹாதேவன்.
ஏதோ ஒரு ஐட்டம் பாட்டு போல் இருக்கு. கேட்க நல்லாவும் வார்த்தைகளில் கொஞ்சம் அளவும் மீறி இருக்காங்க. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் இன்னொரு பாடல். Sounds like தீ தீப்பிடிக்க remix. Nothing Special(1.5/5)

Theme Music- Yuvan Sankar Raja.
கேட்க நல்லா இருக்கு, கிதார் உபயோகப்படுத்திய விதம் அருமை. பழைய கிதார் இசையை electronic கிதாரில் கொண்டு வந்த விதம் புதுசு.

நான் மீண்டும் நானாக வேண்டும்: பாடியது தீபிகா.
மேலும் ஒரு ஐட்டம் பாடல். விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் விஷேசம் இல்லாத பாடல் (1/5). கிதார் விளையாட்டு இதிலும் உண்டு. அதனால தான் 1/5, இல்லைன்னா (0/5)

சேவல் கொடி: பாடியது விஜய் ஜேசுதாஸ்.
இந்தப் படத்தில் முதன்மையான பாடல் இதுதான். முருகனை போற்றிப் பாடுமாறு அமைந்திருக்கிறது இந்தப்பாடல். அநேகமான யுவனின் குத்து பாடல்களில் முதல் 5 க்குள் வரும்படியான பாட்டு. அதேபோல் முருகனைப் போற்றி பாடிய பாடல்களில், சூப்பர் குத்துப் பாட்டு இதுவாகத்தான் இருக்கும். குத்துன்னா குத்து... செம குத்து. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாட்டு இது. அதுவும் அஜித்க்கு intro பாட்டா இதுவே இருந்தா பிரமாண்டமான ஓப்பனிங்கா இருக்கும். (4/5)

வெத்தலைய போட்டேண்டி: பாடியது ஷங்கர் மஹாதேவன்
இன்னும் ஒரு ரீமிக்ஸ் பாடல் மாதிரி ஆனா ரீ மிக்ஸ் இல்லை. கொஞ்சம் குத்து கொஞ்சம் மேற்கத்திய இசைன்னு கலக்கிய விதம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கு. (2.5/5)

ஆக மொத்தம் பில்லா பாடல்களுக்கு கீத்துக்கொட்டாய் குடுக்கும் மதிப்பெண் * * (2/5)