Tuesday, November 6, 2007

பாசத்தமிழனாக சூர்யாவின் வேல்



ஹலோ சூர்யா தள்ளி நில்லுங்க இது உங்க படம் இல்ல புரியுதா?

சரி இனிமே விமர்சனத்துக்குப் போலாம் ரைட்டா

தீவாளிக்கு என்னப் படம் போலாம்ன்னு யோசிச்சு கொஞ்சம் முன் ஜாக்கிரதையா முடிவெடுத்துப் போனப் படம் நம்ம சூர்யா & சூர்யா நடிச்ச வேல் படம் ... ரெண்டு சூர்யாங்க.. ரெண்டும் நம்ம ஜோவின் சூர்யா தான்.. எஸ்.ஜே.சூர்யாவோடு போட்டு குழப்பிக்காதீங்க...

படத்தோட இயக்குனர் ஹரின்னு தெரிஞ்சதும் கதையும் தெரிஞ்சுப் போச்சு... போஸ்ட்டர் மற்றும் ட்ரெயிலர்களில் படத்தை தீபாவளிக்கு முன்னாடியே பலத் தடவைப் பார்த்து பழகிய பின்னும் தியேட்டருக்கு வேற போயிட்டோம் இல்ல.







ஒரு காலத்துல்ல வில்லனா அசத்துன சரண்ராஜ் இந்தப் படத்துல்ல அடக்க ஒடுக்கமான அப்பா...என்னக் கொடுமை சார் இது.. அவருக்கு மனைவியாக சூர்யாஸ் அம்மாவாக தவமாய் தவமிருந்து புகழ் அம்மா சரண்யா

ட்ரெயின்ல்ல நகையைத் தொலைப்பாங்க... பணத்தைத் தொலைப்பாங்க.. நம்ம வேல் படத்துல்ல சரண்ராஜூம் அவர் மனைவியும் குழந்தையைத் தொலைக்கிறாங்க.. ஆதி காலத்து ஜெய்சங்கர் படங்கள் ஞாபகம் வரும் விதமாக..

ஒரு சூர்யா சிட்டி கையாவும்... இன்னொரு சூர்யா கிராமத்தில் பெரிய கை யாகவும் வளர்ந்து வாழுகிறார்கள்.

சிட்டி கை சூர்யா..ஒரு துப்பு துலுக்கும் அலுவலகத்தில் முக்கிய புள்ளியாக டூட்டி பார்க்கிறார்..அதே சமயத்தில் ஸ்கூட்டியில் வரும் பியூட்டி அசினோடு டுயட் பாடுகிறார்..

சொக்கம் பட்டி கை சூர்யா.. காக்க காக்க ஜீப் மாடலில் ஒரு ஜீப்பில் ஏறி ஐசக் நியூட்டன் அரும்பாடு பட்டு கண்டுபிடித்த அனைத்து இயற்பியல் விதிகளை அநியாயத்துக்கு நக்கல் அடிக்கிறார்.. நோ வாக்கிங்... கிராமத்து அறிமுகமே பிளையிங் தான்....ஹரி படங்களின் முக்கிய கதாபாத்திரமான அருவாள் இதில் கிராமத்து சூர்யா மற்றும் அவர் அடியாட்கள், சூர்யாவை எதிர்க்கும் வில்லன் கோஷ்ட்டியோட படம் முழுக்க மற்றும் ஒரு முக்கிய ரோலில் கிழி கிழி எனக் கிழிக்கிறது.

கிராமத்துச் சூர்யாவுக்கும் அவரைத் தத்து எடுத்த குடும்பத்துக்கும் நிரந்தர தலைவலி தரும் வில்லனாக கலாபவன் மணி.. அவருடைய் வழக்கமான சேட்டைகள் கொஞ்சம் கம்மி தான் இந்தப் படத்தில்.

இந்தப் பிரச்சனை ஒரு புறம் என்றால்.. குழந்தையைத் தொலைத்த அம்மாவின் பாசம் என இன்னொரு பக்கம் கதையை நகர்த்துகிறார் ஹரி... கதையின் இடைவேளையில்... சாரி படத்தின் இடைவேளையில் இரண்டு சூர்யாக்களும் நேருக்கு நேர் சந்திக்க பாசப் போராட்டமாய் படம் ட்ராக் மாறுகிறது..

இரட்டை வேடக் கதைகளுக்கே உரித்தான ஆள் மாறாட்டம்..அதன் மூலம் ஒருவர் பிரச்சனையை ஒருவர் தீர்ப்பது என அமைக்கப்பட்ட இலக்கணத்தை கடைப்பிடித்து படம் போகிறது. இறுதியில் நன்மை வெல்கிறது தீமை சாய்கிறது சுபம்.. இது தான் வேல்

சூர்யாவுக்கு இரட்டை வேடம்.. அதிகம் வித்தியாசம் எல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லாத இரட்டை வேடம். காக்க காக்க ஜிப்பில் ஏறி போனத் தடவை துப்பாக்கி தூக்கிய சூர்யா இந்த முறை அதே ஜீப்பில் ஏறி அருவாள் தூக்குகிறார். மொறைப்பும் விறைப்புமாகத் திரிகிறார். அசினை அளவோடு காதலிக்கிறார்.பாசக்காரப் பயலாக பெத்த அம்மா அப்பா, வளர்ப்பு குடும்பம் என மொத்தப் பேரிடம் பொங்குகிறார். மத்தப் படி சொல்லிக்கிற மாதிரி பெரிய வேலை எல்லாம் அவருக்கு இல்லை.

அசினுக்கும் பெரிய வேலை. சூர்யாவைக் காதலிக்கணும். ஆடணும் பாடணும். போஸ்டருக்குப் போஸ் கொடுக்கணும். அதை செய்துவிட்டு போகிறார்.

பாசமழையைக் கண்டப் படி பொழியும் கதாபாத்திரங்களில் சரண்யா, சரண்ராஜ், லட்சுமி,ராஜ்கபூர் மற்றும் பலர். வில்லன் கலாபவன் மணிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா. சார்லி மற்றும் வையாபுரிக்கு சின்ன வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

படத்தில் முக்கியமான வேடத்தில் வடிவேலு...வழக்கமான பாணி காமெடி என்றாலும் சிரிக்க வைக்கிறார். அறிமுக காட்சியில் இருந்து அவர் அலம்பல் ஆரம்பம் ஆகிறது.

பாடல்கள் யுவன் ஷங்கராம்..நம்ப முடியவில்லை...பாடல்கள் ஹரியும் எழுதியிருக்கிறாராம்....கேட்டாலே சும்மா அருவாள் எடுத்து முதுகைத் தேய்க்கணும் போலிருக்கு..

படத்துக்கு நடன அமைப்பாளர் கிடைக்கல்லயா இல்ல ஷீட்டீங் அன்னிக்கு லீவ்ல்ல போயிட்டாரான்னு தெரியல்ல.. அதுவும் அந்த வெளிநாட்டு பாடல் காட்சியில் ஆட்டமே ஆடுகிறதுன்னாப் பாருங்க..

மொத்தத்தில் வேல் ஒரு கீத்துக்கொட்டா முன் வரிசை ரசிகன் என்ன எதிர்ப்பார்ப்பானோ அதை கொடுக்க முயற்சி பண்ணி இருக்கார் ஹரி.

பிகு: இந்த படத்தில் முதல் முறையாக சூர்யாவும் பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி பல்ஸ் எகிற வைத்திருக்கிறார்.

5 comments:

ILA (a) இளா said...

ஆக மொத்தம் ஹரியின் வேல் "கூர்மை இல்லை"..

இலவசக்கொத்தனார் said...

ஒட்டு மொத்த கருத்துமே காசு குடுத்து பாக்க வேண்டாம் என்பது போல்தான் இருக்கிறது. அந்த காசுக்கும் உம்ம பேரைச் சொல்லி ஒரு சரவணபவன் ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிட்டுக்கறேன்.

Unknown said...

அட இளா கூர்மைன்னா செம கூர்மைன்னு சொல்ல வந்தா இப்படித் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே :-)

Unknown said...

//இலவசக்கொத்தனார் said...
ஒட்டு மொத்த கருத்துமே காசு குடுத்து பாக்க வேண்டாம் என்பது போல்தான் இருக்கிறது. அந்த காசுக்கும் உம்ம பேரைச் சொல்லி ஒரு சரவணபவன் ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிட்டுக்கறேன்.//

இப்படி எல்லாம் நீங்கப் பாக்கறதை நிறுத்துனா அவங்க இப்படி எல்லாம் படம் எடுக்கரதை நிறுத்திடுவாங்கன்னு நினைக்கிறீங்களா... ஹ்ம்ம்.. நடக்காதுங்க நடக்காது.. சரி எனக்கும் ஒரு மீல்ஸ் பார்சல் சொல்லுங்க..:-)

நாகை சிவா said...

//கேட்டாலே சும்மா அருவாள் எடுத்து முதுகைத் தேய்க்கணும் போலிருக்கு..
//

ஒவர் கூர்மையா போயிடுச்சு போல..

தீபாவளி படங்களில் இது தான் தேவல என்று சொன்னாங்க.. இதுவே இப்படியா..

இருந்தாலும் தரையிறக்கிற வேண்டியது தான் :)