Monday, January 28, 2008

House of Sand and Fog

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- மகுடேஸ்வரன்

பாலுமகேந்திராவின் 'வீடு' பார்த்திருக்கிறீர்கள் தானே? 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதையை மிகச் சிறப்பாக படமாக்கியிருப்பார். 'House Of Sand and Fog' படத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் மகுடேஸ்வரனின் இந்த கவிதையும் பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படமும் நினைவுக்கு வருகின்றன. இப்படம் பார்த்து இரண்டாண்டுகளுக்கு மேலான பின்னர் நேற்று பார்த்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்பட காட்சி இந்த படத்தை ஞாபகப்படுத்திவிட்டது. ஜோதிகா பாலீத்தீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை செய்ய முயலும் காட்சியில் சொல்வாரே "பென் கிங்க்ஸ்லி ஒரு படத்துல இப்படி தான் செய்வார்" என்று, அது இந்த படம் தான்.

கேத்தி மணம் முறிந்த, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் பெண். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது. ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான பெஹ்ரானி அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்று தன் உயர்கல்விக்கு பயன்படுத்த நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. நோய்வாய்ப்பட்ட மனைவியுடனும் மகன் இஸ்மாயிலுடனும் அந்த வீட்டுக்கு வருகிறார்.



வீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும் கேத்தி வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள். தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட பெஹ்ரானி அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.

லெஸ்டர் உள்ளூர் போலீஸ்காரர். மணமுறிந்தவர். கேத்தியின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். பெஹ்ரானியை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். பெஹ்ரானி குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார். இறுதியில் பெஹ்ரானி அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி கேத்தியிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார். அரசு அலுவலகத்துக்கு செல்கையில் லெஸ்டர் எதிர்பாராத சமயத்தில் இஸ்மாயில் அவனது துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். அந்த நேரத்தில் அங்குவரும் காவலாளிகள் இஸ்மாயிலை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான். லெஸ்டர் போலீஸிடம் தன் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

மகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் பெஹ்ரானி தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார். வீட்டுக்கு வரும் கேத்தி அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள். இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் "இது என்னுடைய வீடு இல்லை" எனக் கூறி சென்றுவிடுகிறாள். யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.



இழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் கேத்தி, புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் பெஹ்ரானி என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. படம் நெடுகிலும் இறுக்கமான காட்சிகள் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. காட்சிகளுடன் ஒத்துப்போகும் மென்சோக பின்னணி இசை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கேத்தியாக ஜெனிபர் கானெலி(Jennifer Connelly) நடித்திருக்கிறார். விரக்தியையும் இழப்பையும் கண்களில் காட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் சோகத்தின் உச்சத்தில் இருக்கும் ஆரம்ப காட்சிகளாகட்டும், வீட்டைக் காப்பதற்காக பெஹ்ரானியுடன் சண்டையிடும் போதாகட்டும், தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும் 'சர்வைவலுக்காக' வீட்டை விட்டு போகாமல் தவிக்கும் கணங்களாகட்டும் ஜெனிபர் கானெலி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெஹ்ரானியாக பென் கிங்க்ஸ்லி(Ben Kingsley). இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். உடைந்த ஆங்கிலத்தில் வசன உச்சரிப்பிலும் நடை, பாவனைகளிலும் பெஹ்ரானி கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்துகிறார். வீடு வாங்கிய போது பெருமிதமும், பின்னர் அதை இழக்க நேருமோ என்ற தவிப்பும், மகனை இழந்து துடிப்பும் கோபமும் அழுகையும், இறுதிக் காட்சியில் மரணத்தை எதிர்கொள்ளும் சோகமும் என வெகுசிறப்பாக நடித்திருக்கிறார்.

கண்டிப்பாக இந்த படம் மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.

இதே பெயரைக் கொண்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . மனித வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது. House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.

5 comments:

Ayyanar Viswanath said...

நல்ல இடுகை கப்பி பொருத்தமான கவிதை அட எனக்கு தோணாம போச்சேன்னு இருந்தது :)

btw இது நம்ம மேட்டர்
http://ayyanaarv.blogspot.com/2007/12/blog-post_28.html

கப்பி | Kappi said...

நன்றி அய்ஸ் :)

உங்க இடுகையை எப்படி பார்க்காம விட்டேன்னுதான் தெரியல :))

Radha Sriram said...

ரொம்ப நல்ல படங்க இது....மனச அப்டியே என்னவோ பண்ணிருச்சு....பென் அருமையா நடிச்சிருப்பாரு....நல்ல பிழிய பிழிய அழுதேன்..!!

கோபிநாத் said...

ம்ம்..தேடிக்கிட்டு இருக்கேன்..;)

கப்பி | Kappi said...

Radha Sriram

//....மனச அப்டியே என்னவோ பண்ணிருச்சு....பென் அருமையா நடிச்சிருப்பாரு....
//

அதே அதே!!

//நல்ல பிழிய பிழிய அழுதேன்..!!//

இந்த மாதிரி அழவைக்கிற படங்கள் ரொம்ப அபூர்வம் இல்லைங்களா :)

நன்றி


கோபிண்ணே

அய்ஸ்ட்ட கேட்டு வாங்குங்க ;)